நல்லா பண்ணிருக்கீங்க.. கீப் இட் அப்.. முதல்வரை பாராட்டிய மோடி.. நேற்று மீட்டிங்கில் நடந்தது என்ன?
கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.
டெல்லி: கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. 275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதில் மொத்தம் 229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக இன்று மட்டும் காலையிலிருந்து 17 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். மொத்தம் 22 மாநில முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் மக்கள் முன்னிலையில் பேசிய மோடி அப்போதே மாநில முதல்வர்களை இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து இருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது.

எத்தனை மணி நேரம்
மொத்தம் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 9 மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர், கேரள முதல்வர், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேச ஆகிய மாநில முதல்வர்கள் இதில் நீண்ட நேரம் பேசினார்கள். தங்கள் மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

கேரளா முதல்வர்
இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நீண்ட நேரம் பேசினார். இதில் பேசுவதற்காக அவர் பெரிய அளவில் கோப்புகளை எடுத்து வந்து, முழு தயாரிப்போடு பேசினார். தங்கள் மாநில பிரச்சனைகளை அவர் முழுமையாக அடுக்கினார். அதற்கு எதிரான செயல்திட்டங்களை விளக்கினார். அதேபோல் கேரள மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வேண்டும் என்பதையும் அவர் இதில் குறிப்பிட்டார். அவரின் பேச்சை பல மாநில முதல்வர்கள் கூர்ந்து கவனித்தார்கள்.

தமிழகம் எப்படி
அதன்பின் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை குறித்து பேசினார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எப்படி சரி செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். இவரும் பல்வேறு முக்கிய விஷயங்களை இதில் எடுத்துரைத்தார். அதன்பின் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச அனுமதி கேட்டும் கூட அனுமதி வழங்கப்படவில்லை.

என்ன பாராட்டு
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிச்சாமியை பாராட்டிய மோடி, நீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள். தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உங்கள் பணிகளை தொடருங்கள் என்று கூறினார். அதன்பின் மகாராஷ்டிரா மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமாக முயல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications