சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கொரோனாவிற்கு பலி
சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் சின்ஹாவிற்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியானது.
டெல்லி: சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் சின்ஹாவிற்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கடந்த 1974ஆம் ஆண்டு பிஹார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றியுள்ளார்.

பாட்னாவில் சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு வரை சிபிஐ இயக்குநராக பதவி வகித்தார் ரஞ்சித் சின்ஹா.
சிபிஐ இயக்குநராக இருந்தபோது சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கடும் மோதலில் ஈடுபட்டார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முடிக்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் ரஞ்சித் சின்ஹா. கூண்டுக்குள் இருக்கும் கிளி, எஜமானார் பேச்சைக் கேட்பது போன்று சிபிஐ செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்த வழக்கில் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ரஞ்சித் சின்ஹா மீது கடந்த 2017ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சின்ஹாவிற்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஞ்சித் சின்ஹாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications