கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்.. எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..புதிய பரிந்துரைகள் என்ன
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து 6 மாதங்களுக்குத் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விரும்பும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும், பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ் கால இடைவெளியை மத்திய அரசு இன்று 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்
கொரோனா தடுப்பூசி தொடர்பாக NTAGI எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மத்திய அரசுக்கு இன்று பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஆறு மாதங்களுக்குப் பின்னால் தான் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல முதல் டோஸை எடுத்துக் கொண்ட பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர் குணமடைந்து நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளலாம்.

ஐசியு சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்ததிலிருந்து மூன்று மாதங்களுக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது. அதேபோல கொரோனா பாதிப்பால் ஐசியு-இல் சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 6 வாரங்களுக்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என வல்லுநர் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சாய்ஸ்
தற்போதுள்ள விதிமுறைகளின் படி கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை. ஆனால், புதிய பரிந்துரையின்படி கர்ப்பிணிகள் அவர்கள் விரும்பும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்க NTAGI பரிந்துரை அளித்துள்ளது. இருப்பினும், இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Array
கருவுற்ற பெண்கள் கொரோனாவால் அதி தீவிரமாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படவும் அதிக ஆபத்து உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் கொரோனா பாதிப்பு தீவிரமாக மாறுவது தடுக்கப்படுகிறது. அதேநேரம் கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு எப்படிச் செயல்படும் என்பதை அறிய தற்போதுதான் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் நோய் கட்டுப்பாடு மையம் குறிப்பிட்டுள்ளது.

பாலூட்டும் தாய்மார்கள்
அதேபோல பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை. அதேநேரம் mRNA தொழில்நுட்பத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளும் பெண்களின் தாய்ப்பாலிலும் ஆன்ட்டிபாடிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையையும் பாதுகாக்கும் என நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தகவல் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவில் அந்த இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications