இந்தியாவிலிருந்து சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாட்டு சாணம்! காரணம் இதுதான்
டெல்லி: சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குகிறது. அதே அளவில் இங்கிருந்து அரபு நாடுகள் மாட்டு சாணத்தை இறக்குமதி செய்கின்றனர்.
அரபு நாடுகள், பேரீச்ச பழத்தை வைத்து உலக நாடுகளுடன் ஆண்டுக்கு சுமார் ரூ. 2454 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்கிறது. இந்த அளவு விளைச்சலுக்கு உரமாக இந்திய மாடுகளின் சாணம்தான் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் பேரீச்ச பழம் தேவையில் சுமார் 75-77 சதவிகிதத்தை அரபு நாடுகள் பூர்த்தி செய்கின்றன. இந்த பழத்தின் பலன்களை சொல்லி தெரிய வேண்டியதில்லை. B6, K போன்ற வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் போன்ற தாதுக்கள், குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை இனிப்புகள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன.
எனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், இரத்த சோகை போக்வும் இந்த பழம் மிகுந்த பயன்கொடுக்கிறது. மட்டுமல்லாது இயற்கையான முறையில் பிரசவம் ஏற்படவும் இந்த பழம் உதவுகிறது. எனவே உலகம் முழுவதும இப்பழத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட அரபு நாடுகள் பேரீச்சம் பழத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன.
ஆனாலும் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால் மகசூலை அதிகரிக்க இந்திய மாட்டு சாணங்களை அரபு நாடுகள் அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன. கிலோ ரூ.30-50 வரை விலை கொடுத்து வாங்கிக்கொள்கின்றன. பேரீச்ச மரம் வளர்வதற்கு இயற்கையான உரங்கள் அவசியமானதாகும். சமீபத்தில் 192 மெட்ரிக் டன் மாட்டு சாணத்தை குவைத் இறக்குமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் இயற்கை உரங்கள் இருந்தாலும் கூட இந்திய மாட்டு சாணத்துக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.
அந்நாட்டின் வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், மாட்டுச் சாணத்தைப் பொடி செய்து பயன்படுத்துவதால் பேரீச்சம்பழத்தின் மகசூல் அதிகரிக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுவே சாணம் இறக்குமதிக்கு முக்கிய காரணம். இந்தியாவில் சராசரியாக சுமார் 30 கோடி கால்நடைகள் இருக்கின்றன. இவைகள் சராசரியாக 3 கோடி எடை கொண்ட கழிவுகளை வெளியேற்றுகிறது. அரபு நாடுகளை தவிர்த்து சீனா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் இந்திய மாட்டு சாணத்திற்கு மவுசு இருக்கிறது. அங்கு இதனை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications