கிரிக்கெட்டில் மதபாகுபாடு.. அக்தர், கனேரியா பேட்டி.. கையில் எடுத்தது பாஜக.. காங்கிரசுக்கு கேள்வி
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் (சிஏஏ) குறித்து நாட்டில் கொந்தளிப்பு நிலவும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், டேனிஷ் கனேரியா கூறிய ஒரு கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்தும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயிப் அக்தர் ராவல்பிண்டி என்ற வீடியோவில் ஒரு பரபரப்பு கருத்தை வெளியிட்டார். சுழற்பந்து வீச்சாளர், டேனிஷ் கனேரியா இந்து என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அவர் இரண்டாம் தரமாக மதிக்கப்பட்டார் என்று கூறியிருந்தார்.
அவர் சிறப்பாக செயல்பட்டாலும், சக வீரர்களில் பலரும் அவரை பாராட்ட மாட்டார்கள், கூட உட்கார்ந்து சாப்பிட மாட்டார்கள் என்றார் அவர். இதை, டேனிஷ் கனேரியாவும் ஒப்புக்கொண்டுள்ளார். முன்பு இதை கூற பயந்தேன்.. இப்போது அக்தர் முதல் முறையாக வெளியே சொல்லிவிட்டார். யூனிஸ் கான், அக்தர் போன்றவர்கள், எனக்கு அணியில் ஆதரவாக இருந்தனர் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்தார்.
இந்திய குடியுரிமை
டேனிஷ் கனேரியா பற்றி ஷோயிப் அக்தர் வெளிப்படுத்திய கருத்து இந்தியாவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் துன்புறுத்தப்படுவதாகவும், எனவே, அப்படி தப்பி வந்தவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆனால் அதில் முஸ்லிம்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்துகின்றன.
|
பாஜக விமர்சனம்
இந்த நிலையில்தான், தங்கள் அரசு எடுத்த முடிவு சரிதான் என்பது போலத்தான், பாகிஸ்தான் நடந்து கொண்டுள்ளது. இதற்கு டேனிஷ் கனேரியா மற்றும் அக்தர் பேட்டி சாட்சி என்று பாஜக கூறத் தொடங்கியுள்ளது. கர்நாடக பாஜக தனது ட்வீட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் டேனிஷ் கனேரியாவுடன் உணவு சாப்பிடவில்லை, இந்துக்கள் என்பதால் அவர்கள் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள், இந்த விஷயத்தை சோயிப் அக்தர் வெளிப்படுத்தியுள்ளார். இப்போது சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இன்னுமா பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்கள்? வெட்கம் !!! இவ்வாறு காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது அந்த ட்வீட்.
|
தொடர் விமர்சனங்கள்
இறுதியாக! CAA, ஒரு மனிதாபிமான சட்டம் என்பது உறுதியாகிறது. துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினரை அவர்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களுக்கு எதிராக பேச இந்த சட்டம் ஊக்குவிக்கிறது. இந்த சட்டத்தை இந்தியா இயற்றியதற்கு பெருமைப்பட வேண்டும். மனித உரிமைகள், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் சாம்பியன்கள் இப்போது இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யலாமா? இவ்வாறு பாஜக தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐநா சபை
ஐக்கிய நாடுகள் சபையில், பொதுவாக இந்தியாவில் சிறுபான்மையினர் மீது கொடுமைகள் நடப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், டேனிஷ் கனேரியா, அக்தர் போன்ற அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களே, தங்கள் நாட்டில் மதரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதாக கூறியுள்ளதை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.