மோடி அரசு தப்புமா? இன்று தொடங்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் - ராகுல் காந்தியும் இருக்காரே
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது.
கடந்த மாதம் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் தொடங்கியது. ஆனால், அதற்கு முதல் நாள் மணிப்பூர் பெண்களின் நிர்வாண ஊர்வல வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் அமளி துமளியுடன் காணப்பட்டு வருகிறது.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, "மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. எனது இதயம் இதனால் கோபம் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பமாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். முழு வலிமையுடன் சட்டம் தனது கடமையை செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்த இச்சம்பவம் மன்னிக்க முடியாதது." என்றார்.
ஆனால், மக்களவைக்கு உள்ளே பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கூட்டத் தொடரின் முதல் நாளே நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இதே நிலைதான் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சிகள்.
மணிப்பூர் விவகாரம் குறித்து லோக் சபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும், மாநிலங்களவையில் இதுபற்றி விரிவாக விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, ஆனால், பிரதமர் மோடி அவை நடவடிக்கைகளிலேயே கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "லோக் சபாவில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்." என்றார். ஆனால் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ரஜானி பாட்டில் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த நோட்டீஸுக்கு ஆதரவளித்து உள்ளனர். ஆகஸ்டு 8 ஆம் தேதி இதுபற்றி விவாதம் தொடங்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. ராகுல் காந்தி நேற்று மக்களவைக்கு திரும்பியுள்ள நிலையில் அவர் இந்த விவாதத்தில் பேச உள்ளார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 10 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளார்.












Click it and Unblock the Notifications