சிட்டிங் முதல்வர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.. சிறையிலும் சிஎம் ஆக தொடரும் கெஜ்ரிவால்!
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்டிங் முதல்வர் ஒருவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கெஜ்ரிவாலைக் கைது செய்தனர். மதுபான கொள்கை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டிஆர்எஸ் கட்சியின் கவிதா கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை இரவு கைது செய்ததைக் கண்டித்து டெல்லியிலும் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், கெஜ்ரிவால் தரப்பிலும் கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வியாழக்கிழமை டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டார். இருப்பினும், அதில் கெஜ்ரிவாலுக்கு சாதகமான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் வழங்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவு வந்து சில மணி நேரத்திலேயே அமலாக்கத் துறை கெஜ்ரிவாலைக் கைது செய்தது. மதுபான கொள்கை தொடர்பாக அமலாக்கத் துறை 9 சம்மன்களை அனுப்பிய போதிலும் கெஜ்ரிவால் அதற்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்தே கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மதுபான கொள்கை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்றாவது முக்கிய நபர் இவர் ஆவர். லோக்சபா தேர்தலுக்கு சில காலம் முன்பு இவர் கைது செய்யப்பட்டுள்ளது ஆம் ஆத்திக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது.
முதல்வர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை: இது ஒரு பக்கம் இருக்க கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத் துறை வியாழக்கிழமை அவரை கைது செய்துள்ள நிலையில், சிட்டிங் முதல்வர் ஒருவர் அமலாக்க துறையால் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.,
ஹேமந்த் சோரன் விவகாரம்: முன்னதாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை கைது செய்யும் முன்பு ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. அதாவது அமலாக்கத் துறை கைது செய்யும் முன்பு ஹேமந்த் சோரனை ஆளுநர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜார்கண்ட் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
அதை ஜார்கண்ட் ஆளுநர் ஏற்கவே அவர் முன்னாள் முதல்வரானார். அதன் பின்னரே அமலாக்க துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஆனால், கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும் போதே அவரை கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள்: தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போது அவர் முதல்வராக இருந்தார். ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர் தானாக தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இதன் காரணமாகவே ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். அதாவது சிறைக்கு செல்லும் போது முன்னாள் முதல்வராகவே இருந்தார். ஆனால், சிறையிலும் கூட முதல்வரா தொடர்வேன் என்ற நிலைப்பாட்டை கெஜ்ரிவால் எடுத்துள்ளது குறிப்பிடத்த்ககது.












Click it and Unblock the Notifications