24 மணி நேரத்தில்.. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்க வேண்டும்.. பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
தடுப்பூசிகள் கோரி பிரதமருக்கு அரவிந்த கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்
டெல்லி: பல நாடுகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசியை உடனடியாக வாங்கி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் தலைநகரம் டெல்லியில் தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது.. அந்த வகையில், ஒருநாளைக்கு 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்..
உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. மேலும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவைகளும் டெல்லியில் அதிகரித்தபடியே இருக்கின்றன.
பற்றாக்குறை
இதுபோன்ற சூழலில்தான், டெல்லியில் 3 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை எழுந்தது.. இதுகுறித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலும் ஏற்கனவே மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தி இருந்தார்..
கெஜ்ரிவால்
"இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தடுப்பூசி குறித்து மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.. அப்போது கெஜ்ரிவால் சொன்னதாவது:
மையங்கள்
"டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நிறுத்தப்பட்டது... 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் முற்றிலுமாக பயன்படுத்தப்பட்டு விட்டன.. எனவே, அவர்களுக்கான தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டுள்ளன... சில மையங்களில் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே கைவசம் இருக்கின்றன.. அவையும் இன்று போடப்பட்டுவிடும்.
டோஸ்கள்
டெல்லிக்கு ஒவ்வொரு மாதமும் 80 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து தேவைப்படுகிறது.. இந்த அளவு மருந்து கிடைத்தால் 3 மாதத்திற்குள் எல்லாருக்கும் தடுப்பூசி போட முடியும்... டெல்லியில் இரண்டரை கோடி தடுப்பூசி டோஸ்கள் மொத்தமாக தேவைப்படும் நிலையில், இந்த மாதம் 16 லட்சம் டோஸ்கள் மட்டுமே கிடைத்தது..
கடிதம்
இதே நிலைமை பல மாநிலங்களிலும் உள்ளது.. எனவே, வெளிநாடுகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசியை 24 மணி நேரத்தில் உடனடியாக வாங்கி, அவைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்" என்றார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது..!