நீதிபதி பற்றி வாயை விட்டதால் வந்த சிக்கல்.. மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.. ஐகோர்ட் அதிரடி!
டெல்லி: நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியுமான நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிராக ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் காரணமாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரியதால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான நீதிபதி முரளிதர், ப.சிதம்பரத்திற்கும் தனக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவரிடம் தான் ஜூனியராக பணிபுரிந்ததில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், குருமூர்த்தி நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததோடு, அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட அனைத்து ட்வீட்களையும் நீக்கியதாகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான அவரது ட்வீட் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து குருமூர்த்தியை டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.












Click it and Unblock the Notifications