“பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது சரியான நேரம்?” டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி!
டெல்லி: குழந்தைத் திருமணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் குற்றவியல் அம்சங்களில் இஸ்லாமிய மற்றும் இந்திய சட்டங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது சரியான நேரம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
போக்சோ வழக்கு விசாரணை ஒன்றை விசாரிக்கையில் நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குழந்தை திருமணம் தொடர்பான வழக்கு ஒன்று இன்று நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மோங்கா முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்டவர் 16வது சிறுமியாவார். இவர் 14 வயதாக இருக்கும்போது தனது மாற்றான் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவரையே திருமணமும் செய்துக்கொண்டார். இருப்பினும் மாற்றாந்தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். பூப்படைந்த அல்லது 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது ஷரியத் சட்டப்படி செல்லுபடியாகும். எனவே கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில்தான் பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது சரியான நேரம் இல்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார். இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பருவமடைந்த சிறுமிகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும், இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, அத்தகைய திருமணங்களில் கணவரை BNS மற்றும் POCSO சட்டம் குற்றவாளியாக்குகின்றன. இதனை சட்ட மோதல் என்று குறிப்பிட்டிருக்கும் நீதிபதி, இதற்கு சட்ட தெளிவு வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், மதச் சுதந்திரம் பறிபோகும் என்று எச்சரிப்பது உண்மைதான். இந்திய அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்துள்ளது. இருப்பினும், தனிநபர்களை குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு மேலே குறிப்பிட்ட சுதந்திரம் பொருந்தாது" என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications