நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. 2 பேருக்கு ஜாமீன்! UAPA சட்டம் எதுக்கு? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டெல்லி: கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வளாகத்திலும் வண்ண புகை குப்பிகளை பயன்படுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், வளாகத்தில் புகை குப்பிகளை பயன்படுத்திய 2 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மட்டுமல்லாது வண்ண புகை குப்பிகளை பயன்படுத்தியவர்கள் மீது ஏன் 'உபா' வழக்கு பதிவு செய்யப்பட்டது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது. பார்வையாளர்களாக வந்த 2 பேர் திடீரென வண்ண புகை குப்பிகளை பயன்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரையும் கைது செய்த டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி என அடையாளம் காணப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் இதேபோன்று புகை குப்பிகளை பயன்படுத்தியதற்காக மேலும் இருவரை UAPA சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் கைது செய்யப்பட்ட 2 பேருக்குதான் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த மே 21ம் தேதி தங்களது உத்தரவை ஒத்தி வைப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகை குப்பிகளை பயன்படுத்திய இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவில், ஜாமீன் பெற்றவர்கள் பத்திரிகை செய்தி ஊடகங்களுக்கோ, யூடியூப் சேனல்களுக்கோ பேட்டி எதுவும் கொடுக்கக்கூடாது. விசாரணை முடியும் வரை டெல்லியை விட்டு வெளியே போகக்கூடாது. அதேபோல, சோஷியல் மீடியாக்களில் வழக்கு தொடர்பாக எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது. ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, வண்ண புகை குப்பிகளை பயன்படுத்துவது பயங்கரவாத செயலா? அப்படியெனில் ஒவ்வொரு ஹோலி பண்டிகையின்போதும் வண்ண புகை குப்பிகளை பயன்படுத்துவோர் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ஆபத்து இல்லாத வண்ண புகை குப்பிகளை எடுத்து செல்வது உபா சட்டத்தின் கீழ் கடுமையான தண்டைக்குரிய குற்றமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீசார் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications