தேர்தலில் மோடி போட்டியிட தடைக்கோரும் வழக்கு.. நீதிபதி விடுப்பில் சென்றதால் ஒத்திவைத்த கோர்ட்
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதியை மீறிவிட்டார். பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்து 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் நீதிபதி விடுப்பில் உள்ளதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து இன்று 2வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இன்று தேர்தல் முடியும் பட்சத்தில் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஜுன் 1ல் கடைசி கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக மற்றும் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த மனுவை தாக்கல் செய்துள்ளவரின் பெயர் ஆனந்த் எஸ் ஜோன்டேல். வழக்கறிஞரான இவர் பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். கடந்த 9ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிலிபட்டில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறி பேசினார். இந்து தெய்வங்கள் மற்றும் சீக்கிய தெய்வங்களின் பெயர்களையும், வழிபாட்டு தலங்களின் பெயர்களையும் பயன்படுத்தி அவர் ஓட்டு சேகரித்தார். அதோடு எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பிரதமர் மோடி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி சச்சின் தத்தா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் விடுப்பில் சென்றிருந்தார். இதையடுத்து அந்த மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரிக்க உள்ளார்.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதோடு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தான் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இந்த வழக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications