"40 ஆண்டுகளில் இப்படியொரு மழையை பார்த்ததே இல்லை!" அப்படியே ஸ்தம்பித்து நிற்கும் தலைநகர் டெல்லி
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கனமழை உச்சம் தொட்டுள்ள நிலையில், நாளைய தினம் அங்கே பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோடைக் காலம் முடிந்து பருவமழை இப்போது ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் பருவமழை ஆரம்பித்துள்ளது. குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண் சரிவு, வெள்ளம் காரணமாகப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் புயல் மழை கொட்டி வருகிறது.
தலைநகர் டெல்லி: இதனால் டெல்லி சாலைகள் முழுக்க முழுக்க மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை அங்கே கொட்டி தீர்த்து வருகிறது.நேற்று மட்டும் அங்கு 153 மிமீ மழை கொட்டியுள்ளது.
1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். மழை தொடரும் நிலையில் டெல்லியில் நாளைய தினம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வடமேற்கு இந்தியாவில் குறிப்பாக உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் இடைவிடாத கன மழை பெய்து வருகிறது, முன்னதாக 2003 ஜூலை 10இல் 133.4 மிமீ மழையையும், 1958 ஜூலை 21இல் 266.2 மிமீ மழையையும் பதிவாகியிருந்தது. வரும் நாட்களிலும் டெல்லியில் மிதமான மழை தொடரும் என்று கூறி டெல்லிவாசிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது வானிலை மையம்..
கொட்டிய கனமழை: டெல்லியில் உள்ள யமுனை நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது வரும் செவ்வாய்க்கிழமை அபாயக் குறியான 205.33 மீட்டரை தாண்டிவிடும் என்று மத்திய நீர் ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோல முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், குருகிராம் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்கு வானிலை மையம் ஏற்கனவே மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தலைநகர் டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவில் பட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மழை கொட்டி தீர்க்கும் நிலையில், அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கே பல பகுதிகளில் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளன.

ரெட் அலர்ட்: இமாசல பிரதேசத்தில் முக்கிய சுற்றுலா தளமான மணாலியில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கே மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு "ரெட்" அலர்ட் விடுத்துள்ளது. சிம்லா, சிர்மௌர், லாஹவுல் மற்றும் ஸ்பிதி, சம்பா மற்றும் சோலன் மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அங்கே பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்திலும் வெப்பம் குறைந்து மழை கொட்டி வருகிறது. தலைநகர் சண்டிகரில் வெப்பம் குறைந்துள்ள நிலையில், நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாகவே மழை குறைவாக வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் கூட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications