"கண்ணே தெரியல.." அந்தளவுக்கு நிலைமை ரொம்ப மோசம்.. காற்று மாசால் அலறும் தலைநகர் டெல்லி.. கஷ்டம்தான்
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ள சூழலில், நிலைமையைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு என்பது பெரும் தலைவலியாக மாறும். அங்கே காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் செல்வதும் வழக்கம்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பயிர்களை எரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. காற்று மாசை குறைக்க டெல்லி அரசும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
திணறும் டெல்லி: இன்றைய தினமும் டெல்லியில் பல பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கிறது. இதனால் டெல்லியின் பல பகுதிகள் முழுமையாகப் புகை மூட்டத்தில் மூழ்கியது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 346ஆக இருக்கும் நிலையில், அங்கே மாஸ்க் போடாமல் வெளியே செல்வதே ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது. டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையிலேயே இருக்கிறது.
டெல்லியின் லோதி சாலை காற்றின் தரம் 438ஆக இருக்கிறது. அதேபோல ஜஹாங்கிர்புரியில் காற்றின் தரம் 486ஆக இருக்கும் நிலையில், டெல்லி ஏர்போர்ட்டில் இது 473ஆக உள்ளது. டெல்லி மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கிடையே காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் லோதி சாலை பகுதியில் தண்ணீரைத் தெளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
காற்று மாசு மிக மோசமாக இருக்கும் நிலையில், அங்கே சாலையில் சில மீட்டர் தொலைவில் செல்லும் வாகனங்கள் கூட தெளிவாக தெரியவில்லையாம். அந்தளவுக்கு காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி அரசு நடவடிக்கை: காற்றின் தரம் மிக மோசமான நிலையில், இருக்கும் நிலையில், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அங்கே அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் அடுத்த 5 நாட்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காற்றின் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவர்கள் அச்சம்: இது குறித்து டாக்டர் நிகில் மோடி கூறுகையில், "மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் பாதிப்பால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இருமல், சளி, கண்களில் நீர் மற்றும் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் பிரச்சினையும் அதிகரித்துள்ளது.
இதனால் வயதானோர் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டும் என்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.. அதுவும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள்" என்றார்.
விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது, சாதகமற்ற வானிலை நீடிப்பதால், அடுத்த இரண்டு வாரங்களில் டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. காற்று மாசு மிக மோசமாக இருக்கும் நிலையில், அங்கே குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் மோசமாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை தருகிறார்கள்.












Click it and Unblock the Notifications