திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்!
புதுடெல்லி : டெல்லியில் விவசாயிகள் இன்று நடத்திய டிராக்டர் பேரணி, டில்லி போலீசை திணற செய்துள்ளது. விவசாயிகள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் வீச என்ன காரணம் என்பது போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி வலியுறுத்தி 2 மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று குடியரசு தினம் என்பதால் டிராக்டரில் பேரணி வர அனுமதி கேட்டிருந்தனர்.
பேரணிக்கு அனுமதி அளித்த போலீசாரும் டெல்லிக்கு வரும் அனைத்து பாதைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினர். 5 வழிகளில் சுமார் 60 கி.மீ., டிராக்டர் பேரணியை நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

ரூட்டை மாற்றிய விவசாயிகள் :
பிப்ரவரி 1 ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல போவதாகவும் விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். 5 பாதைகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டில்லி நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

மிரண்ட போலீசார் :
ஏற்கனவே அறிவித்த ரூட்டை மாற்றி புதிய ரூட்டில் கிட்டதட்ட 20 கி.மீ., க்கு மேல் பாதை மாறி வந்து விவசாயிகள் டில்லிக்குள் ஊடுறுவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் திடீரென தடுப்புக்களை உடைத்துக் கொண்டு வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்தே தெரியவில்லை. போதிய அளவில் போலீஸ் படை நிறுத்தப்படவில்லை

தடியடி நடத்தும் முடிவுக்கு காரணம் :
இந்த அளவிற்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவே பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள், தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பேரணியாக வந்த விவசாயிகள், போலீஸ் தலைமையகம், பத்திரிகை அலுவலகங்கள் இருக்கும் டில்லியின் மையப் பகுதியை நோக்கி முன்னேறினர்.

அனுமதியை மீறினார்களா விவசாயிகள் :
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பொது போக்குவரத்து வாகனங்கள், போலீசாரின் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனால் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், கூட்டத்தையும் கட்டுப்படுத்தவுமே தடியடி நடத்தினோம் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். பேரணி நடத்த பகல் பொழுதில், அதாவது குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகே பேரணியை துவக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

செங்கோட்டையில் முற்றுகை:
ஆனால் குடியரசு தின அணிவகுப்பு துவங்குவதற்கு முன்னரே விவசாயிகள் பேரணியை துவக்கி உள்ளனர். டில்லிக்குள் வர 5 பாதைகளில் மட்டுமே விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதை தவிர மற்ற பகுதிகள் வழியாகவும் விவசாயிகள் டில்லிக்குள் நுழைந்துள்ளனர். செங்கோட்டையையும் முற்றுகையிட்டு, கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications