12 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை.. நாட்டின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே சாலையை திறக்கும் பிரதமர் மோடி
இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலையாக டெல்லி-மும்பை இடையே 1,380 கிலோமீட்டருக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் பகுதியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
டெல்லி: டெல்லி-மும்பை இடையே 1,380 கிலோமீட்டர் நீளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலை திட்ட பணிகள் ரூ.98 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் இந்த ஆண்டில் முழுவதுமாக முடிவடையும் நிலையில் டெல்லி-மும்பை இடையேயான பயண நேரம் 24 மணிநேரத்தில் இருந்து பாதியாக 12 மணிநேரமாக குறையும். இந்நிலையில் தான் இந்த மிகநீளமான நெடுஞ்சாலையின் முதல் பகுதியாக 246 கிலோமீட்டர் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கிடையே தான் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் ‛வாவ்' சொல்லும் வகையில் பயணிகளுக்கு தேவையான ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியையும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையையும் இணைக்க எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் வகுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் டெல்லி-மும்பை இடையே 24 மணிநேரம் பயணம் செய்ய வேண்டி உள்ள நிலையில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைந்தால் பயணம் நேரம் பாதியாக 12 மணிநேரமாக குறையும்.
இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. மொத்தம் 1,380 கிலோமீட்டர் தொலைவில் இந்த சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியது. 2018 ம் ஆண்டில் துவங்கிய இந்த திட்ட பணிகள் 2023ல் முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இந்த எக்ஸ்பிரஸ் சாலை இணைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் டெல்லி-மும்பை இடையேயான 1,424 கிலோமீட்டர் தொலைவு 180 கிலோமீட்டர் வரை குறையும். அதாவது டெல்லி-மும்பை இடையே தொலைவு என்பது 1242 கிலோமீட்டராக மாறும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.98 ஆயிரம் கோடியாகும்.

முதல் பாதியை திறக்கும் பிரதமர் மோடி
பணிகள் விரைந்து நடந்து வந்த நிலையில் தற்போது டெல்லி - மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் ஹரியானா மாநிலம் தவுசா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் லால்சேட் பகுதிகளை இணைக்கும் 246 கிமீ தொலைவிற்கான சாலை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. ரூ.12,150 கோடியில் இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் டெல்லி -தவுசா -லால்சேட் இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

பயண நேரத்தில் ஒன்றரை மணி நேரம் குறையும்
இந்த சாலை பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இதற்கு முன்பு 5 மணிநேரம் பயணிக்க வேண்டிய சூழலில் இந்த பயண நேரம் மூன்றரை மணிநேரமாக குறைய உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி மக்கள் பயனடைய உள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வசதிகள் என்னென்ன?
அதன்படி இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் டிராபிக்கை கிளியர் செய்ய ஆட்டோமேட்டிக் டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை வெள்ளத்தால் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காத வகையில் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆப்டிகல் பைபர் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் சோலார் மின் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப 3 மீட்டர் அகலமுள்ள பிரத்யேக நடைபாதை தயாராகி வருகிறது.

ஏடிஎம், ஹோட்டல்,
மேலும் பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு, ஏடிஎம்கள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனை கடைகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் செய்யும் இடங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதோடு கைத்தறி, கைவினை கலைஞர்கள், பழம், காய்கறி செய்யும் வியாபாரிகளுக்கான வியாபார கூடமும் அமைத்து கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆபத்து கால உதவி விரைவாக கிடைக்கும் வகையில் 100 கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் ஹெலிபேட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்கள்
இதுமட்டுமின்றி இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது 93 வழித்தடங்களை இணைக்கும் வகையில் அமைய உள்ளது. இதன்மூலம் 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், புதிதாக வரவிருக்கும் கிரீன்பீல்ட் விமான நிலையங்களான ஜெவார் விமான நிலையம், நவி மும்பை விமான நிலையத்தையும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை இணைக்கப்பட உள்ளது. இதில் லாரிகள் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications