“இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்".. கொலம்பியாவில் மோடி அரசை தாக்கி பேசிய ராகுல் காந்தி
கொலம்பியா: "இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக. ஜனநாயகம் மீதான தாக்குதல் மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
கொலம்பியா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். சீனாவை விட முற்றிலும் மாறான அமைப்பு இந்தியாவில் உள்ளது. மையப்படுத்தப்பட்ட அமைப்பை கொண்டதாக சீனா உள்ளது. இந்தியாவோ பரவலாக்கப்பட்டதாகவும், பல மொழிகள், கலாசாரங்கள், மரபுகள் மற்றும் மதங்களை கொண்ட அமைப்பாக உள்ளது. மிகவும் சிக்கலான அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்தான் மிகப் பெரிய ஆபத்து.
சீனா செய்வதை நாங்கள் செய்ய முடியாது. அந்த நாடு மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை நடத்துகிறது. எங்கள் நாட்டின் அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளாது. 2016-இல் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு கொள்கை மிகப்பெரிய தோல்வியடைந்தது. கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். கொள்கையாக அது தோல்வியை தழுவியது.
அமெரிக்காவில் உற்பத்தி துறையில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். ஜனநாயகமற்ற சூழலில் சீனா தனது உற்பத்தி திறனை நிரூபித்துள்ளது. ஆனால், நமக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. எனவே சீனாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு ஜனநாயக சூழலில் உற்பத்தி மாதிரியை உருவாக்குவதே நமக்கு உள்ள மிகப்பெரிய சவால்.
அதிகாரப் பரவலாக்கல்தான் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு பயனுள்ள வழி. ஆனால், இந்தியாவில் ஆளும் பாஜக அரசில் பரவலான ஊழல் நிலவுகிறது. இந்தியாவில், இப்போது மிகவும் மையப்படுத்தப்பட்ட மட்டத்தில் மிகப்பெரிய அளவிலான ஊழல் உள்ளது. பிரதமருடன் நேரடி உறவைக் கொண்ட மூன்று, நான்கு வணிகங்கள் முழு பொருளாதாரத்தையும் கைப்பற்றுகின்றன. இந்தியாவில் இப்போது ஊழல் பரவலாக உள்ளது" என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications