துணை முதல்வர் பதவி அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் பரபர கருத்து!
டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுக்கள் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன.
நாட்டில் தற்போது பல மாநிலங்களில் துணை முதல்வர்கள் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் துணை முதல்வர் பதவி வழங்குவது இயல்பானது. அதேபோல ஆளும் கட்சியில் முதல்வர் பதவிக்கான போட்டிகளில் இருக்கும் சீனியர்களை சமாளிக்கவும் துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. துணை முதல்வர்கள் பதவி என்பது நடைமுறையில் அமைச்சர்களுக்கு சமமான பதவிதான். அதற்கு மேல் அதிகாரம் கொண்ட பதவி அல்ல.

தற்போதைய துணை முதல்வர்கள்: ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான், தெலுங்கானா, உ.பி. மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக் ஆந்திராவில்தான் 4 துணை முதல்வர்கள் பதவி வகிக்கின்றனர். பீகாரில் 2, சத்தீஸ்கரில் 2, ம.பி.யில் 2, மகாராஷ்டிராவில் 2 , மேகாலயாவில் 2, நாகாலாந்தில் 2, ராஜஸ்தானில் 2, உ.பி.யில் 2 பேர் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்.
தமிழ்நாடும் துணை முதல்வர்களும்: தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதி பதவி வகித்த போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தார். அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தார். தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படலாம் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு: இதனிடையே உச்சநீதிமன்றத்தில் Public Political Party என்ற கட்சியின் சார்பில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாட்டின் பல மாநிலங்களில் துணை முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு எதிரான துணை முதல்வர் பதவி நியமனங்களை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வாதம்: இப்பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட், ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், துணை முதல்வர் நியமனம் என்பது தவறான முன்னுதாரணம். எந்த அடிப்படையில் ஒரு துணை முதல்வர் நியமிக்கப்ப்டுகிறார்கள்? அரசியல் சாசனத்தின் 51A பிரிவுக்கு எதிரானதுதான் துணை முதல்வர் நியமனம் என வாதிட்டார்.
தலைமை நீதிபதி கருத்து: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், என்னதான் துணை முதல்வராக ஒருவர் நியமிக்கப்பட்டாலும் அவர் அமைச்சர்தான். துணை முதல்வர் பதவி என்பது ஒரு அடையாளம் மட்டும்தான். துணை முதல்வர் நியமனம் என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் அல்ல. துணை முதல்வர் என முத்திரை குத்தப்பட்டதாலேயே கூடுதல் ஊதியம் போன்ற எதுவும் வழங்கப்படுவதும் இல்லை என்றார்.
பொதுநலன் மனு டிஸ்மிஸ்: இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் என்பது ஒரு மாநில அரசின் அமைச்சர். இந்த நியமனம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல. ஆகையால் துணை முதல்வர்கள் நியமனத்துக்கு எதிரான பொதுநலன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது.












Click it and Unblock the Notifications