"பாலைவன புயல்.." ராஜஸ்தானில் நாளை நடக்கும் சம்பவம்! களமிறங்கும் இந்திய- அமீரக ராணுவம்.. என்ன மேட்டர்
டெல்லி: இந்தியா, ஐக்கிய அமீரகம் இணைந்து பாலைவன புயல் 2024 என்ற முக்கியமான போர்ப் பயிற்சியை விரைவில் நடத்தவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாகவே நட்பு நாடுகளின் ராணுவத்திற்கு இடையே போர்ப் பயிற்சிகள் அவ்வப்போது நடத்தப்படும். இவை இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்தியா கடந்த காலங்களில் பல நட்பு நாடுகளுடன் போர்ப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

இதற்கிடையே இந்தியா மற்றும் அமீரகம் இடையேயான நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளும் இணைந்து இந்தாண்டு முதல் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளது.
போர்ப் பயிற்சி: "பாலைவன புயல் 2024" என்ற பெயரில் நடக்க உள்ள இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நாளை ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை இரண்டு வாரக் காலத்திற்கு இந்த ராணுவ போர்ப் பயிற்சி ராஜஸ்தானின் வறண்ட நிலப்பரப்புகளில் நடத்தப்படும்..
ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் இரு நாட்டு ராணுவமும் இந்த கடுமையான ராணுவ போர்ப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகம் இணைந்து நடத்தும் முதல் கூட்டு ராணுவப் பயிற்சியான பாலைவன புயல் ஜனவரி 2 முதல் 15 வரை ராஜஸ்தானில் நடத்தப்படும். நகர்ப்புற நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக் கொள்வதற்கும் பகிர்வதற்கும் இது உதவும்" என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டு ராணுவ பயிற்சி: நட்பு நாடுகள் உடனான கூட்டு ராணுவப் பயிற்சிகள், ஆக்கப்பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளின் ஆயுதப் படைகளுடன் செயல்படுவதன் மூலம் நமது வீரர்களின் திறன்களை மேம்படுத்துகின்றன. இந்த போர்ப் பயிற்சிகளில் தொழில்நுட்ப நடைமுறைகள், ராணுவ நுட்பங்கள் மற்றும் உத்திகள் பரிமாறப்படும். இது ராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உதவுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்களான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மற்றும் ஐஎன்எஸ் திரிகண்ட், ரியர் அட்மிரல் வினீத் மெக்கார்டி ஆகியவை ஐக்கிய அமீரகத்துடன் பயிற்சியில் பங்கேற்றன.
இந்திய ஐக்கிய அமீரக உறவு: இந்தியாவும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையேயான தூதரக உறவு என்பது 1972ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. அந்த ஆண்டில் தான் ஐக்கிய அமீரகம் தனது தூதரகத்தை முதலில் டெல்லியில் திறந்தது, அதன் பிறகு ஓராண்டு கழித்து இந்தியா 1973இல் அபுதாபியில் தனது தூதரகத்தைத் திறந்தது. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கான முக்கியமான நட்பு நாடாக அமீரகம் தொடர்கிறது. இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகத்திற்கு இடையேயான இருதரப்பு உறவு சீராக வளர்ந்து இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான பரிமாற்றங்கள் உள்ளன. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாட்டுக் கடற்படைகளின் கப்பல்களும் பல விஷயங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications