மன்னிப்பு கேள்.. தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்பிக்கள் போராட்டம்.. அதிர்ந்த நாடாளுமன்றம்
டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று நாடாளுமன்றத்தில் பேசியபோது தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர் எனக்கூறினார். அதன்பிறகு அதனை அவர் வாபஸ் பெற்ற நிலையில் தர்மேந்திர பிரதானை கண்டித்து இன்று தமிழக எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி மன்னிப்பு கேள் என்று கோஷமிட்டு அதிர வைத்தனர்.
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிகள், ‛‛பாஜக மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறது'' எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மறுபுறம் பாஜக மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறது. ‛‛தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை செயல்பாட்டில் உள்ளது போல் மத்திய அரசு புதிய கல்வி கொள்கை மூலம் அரசு பள்ளிகளில் மும்மொழியை கொண்டு வருகிறது. இதில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அரசியல் செய்கின்றன. அரசியல் காரணங்களுக்காக மும்மொழி கொள்கையை தடுக்கின்றன'' என பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இந்த பஞ்சாயத்துக்கு நடுவே தான் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இதனால் சமக்ரா ஷிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம். நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2ம் அமர்வாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் திமுக எம்பிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். அப்போது அவர், "தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்றார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு இந்த வார்த்தைகளை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாபஸ் பெற்றார். ‛‛ என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்'' என கூறினார். இருப்பினும் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கனிமொழி எம்பி லோக்சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தமிழக எம்பிக்கள் கருப்பு நிற ஆடை அணிந்து போராட்டம் நடத்தினர். மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள் என்று கோஷமிட்டனர். அதோடு கைகளில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டம் என்பது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் பல இடங்களிலும், கோயம்புத்தூர், கரூர், சேலம், மதுரை, தேனி, திருநெல்வேலி. மயிலாடுதுறை, வேலூர் மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். தர்மேந்திர பிரதானின் உருவப்பொம்மைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications