காட்டி கொடுத்த டிஜிட்டல் புட் பிரிண்ட்.. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு! முக்கிய தகவல்
டெல்லி: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் புட் பிரிண்ட்களை ஆய்வு செய்ததில் அதில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக உளவு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அங்குச் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது உள்ளது.

காட்டி கொடுத்த டிஜிட்டல் புட் பிரிண்ட்
இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் புட் பிரிண்ட்களை (digital footprints) ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தானின் முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள மையங்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மும்பை தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதைப் போல ரிமோட் கண்ட்ரோல் அறையைப் பயன்படுத்தி, அங்கிருந்து தாக்குதலை ஒருங்கிணைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்டத் தகவல்
மேலும், துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பியோரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் அதிநவீன ஆயுதங்கள் இருந்துள்ளன. ஏகே ரைபிள்களை வைத்துள்ளனர். மேலும், அதிநவீனத் தகவல் தொடர்பு சாதனங்களையும் அவர்களிடம் இருந்ததாகத் தெரிகிறது. அவர்களில் சிலர் ராணுவத்தை போன்ற சீருடைகளை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்குத் தொடர்பு
இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், "பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பு இருப்பது எங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள சில கண்ட்ரோல் செண்டர்களுக்கு டிஜிட்டல் புட் பிரிண்ட் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.. அந்த கண்ட்ரோல் செண்டர்கள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் உளவுப் படையான ஐஎஸ்ஐ மேற்பார்வையில் இயங்குகிறது" என்றார்.
அத்துமீறும் பாகிஸ்தான்
மேலும், அதிநவீனப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்பும் முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக மற்றொரு உளவுத் துறை அதிகாரி கூறுகையில், "கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில், கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவிற்குள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் உளவுப்படையும் முயன்று வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது" என்று கூறியிருந்தார்.
தேசிய புலனாய்வு முகமை
முன்னதாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய உள்ளூர்வாசிகளைக் கண்டறிய ரெய்டு நடத்தியிருந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர்வாசிகள் சிலர் உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தையும் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான உள்ளூர் மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். ஆனால், ஓரிருவர் உள்ளூர்வாசி என்ற போர்வையில் இதுபோன்ற மோசமான சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications