பாஜக எதிர்ப்பை கைவிடாத திமுக.. லண்டனிலிருந்து பறந்து வந்த உத்தரவு! டெல்லியில் களமிறங்கிய ஆ.ராசா
டெல்லி: இந்தியா கூட்டணியிலிருந்து திமுக தனித்து இருக்கும் நிலையில், பாஜகவுடன் கை கோர்க்கிறதோ? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் சோனம் வாங்சுங்கை, திமுக எம்பி ஆ.ராசா சந்தித்து.. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "ஒன்றிய அரசின் CBSE தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நீதி கேட்டும், ஒன்றிய போட்டித் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தியும் டெல்லியில் தொடர் பட்டினிப்போராட்டம் நடத்திவரும் சோனம் வாங்சுங்கை, லண்டனில் இருந்தபடியே கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்தேன்" என பதிவிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்பு இரண்டு விஷயங்களை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மத்திய அரசுக்கு எதிராகத்தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற அமைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில்தான் தற்போது வான்சுங் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம், பாஜகவை இன்னும் நாங்கள் எதிர் களத்தில்தான் வைத்திருக்கிறோம் என்கிற மெசேஜை திமுக கொடுத்திருக்கிறது.
'இந்தியா' கூட்டணியில் திமுகவுக்கு சில சங்கடங்கள் இருக்கிறதுதான். அதே நேரம், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற திமுக முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இதையெல்லாம் வைத்து திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது என கருதக்கூடாது என்பதை இந்த சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.
அதேபோல எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் தீவிரமாக களமாட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அதற்கு பாஜகவை எதிர்த்துதான் ஆக வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் ஆ.ராசா, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க திமுக தலைமை கூறியிருக்கிறது.
லோக்சபாவை பொறுத்தவரை, 5வது பெரிய கட்சியாக திமுக இருக்கிறது. கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக கொண்டுவந்தபோது அதை தோற்கடித்ததில் திமுகவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. இதெல்லாம் கட்சியின் இமேஜை உயர்த்தியிருக்கிறது. அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள.. பாஜக எதிர்ப்பு அவசியம்.
மறுபுறம் கரப்பான் பூச்சி கட்சி போன்ற அமைப்புகளுடன் திமுக கை கோர்ப்பதன் மூலம், GenZ இளைஞர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக ஊடுருவ முடியும் என்றும் திமுக நம்புகிறது. இந்த பின்னணியில்தான் ஆ.ராசாவை டெல்லியில் களமிறக்கியிருக்கிறது திமுக என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.














Click it and Unblock the Notifications