அரசியல் மோதல்களுக்கு.. ஏன் EDயை பயன்படுத்துறீங்க.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.
MUDA ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன்களை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ED தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு எதிராக மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (MUDA) நில ஒதுக்கீடு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) தொடர்ந்த நடவடிக்கைகளை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ED தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரிக்க மறுத்து, "அரசியல் மோதல்கள் கட்சிகள் இடையே தேர்தலில் நடக்கும்.. வாக்காளர்களிடையே நடத்தட்டும். நீங்கள் (ED) ஏன் இதில் பயன்படுத்தப்படுகிறீர்கள்?" என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தனர்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், " மிஸ்டர்.. ராஜு, நாங்கள் பேசாமல் இருக்கிறோம்.. ஆனால் எங்களை பேச வைக்கிறீர்கள் .. எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். இல்லையெனில், ED பற்றி சில கடுமையான கருத்துக்களை கூற வேண்டியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, எனக்கு மகாராஷ்டிராவில் சில அனுபவங்கள் உள்ளன. அமலாக்கத்துறையின் இந்த செயலை நாடு முழுவதும் பரப்ப வேண்டாம். அரசியல் யுத்தங்களை வாக்காளர்கள் முன் நடத்துங்கள். நீங்கள் ஏன் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
முடா வழக்கு பின்னணி
பார்வதிக்கு மைசூருவில் சுமார் ரூ.56 கோடி மதிப்புள்ள 14 உயர் மதிப்புள்ள மனைகள் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அவரிடமிருந்து MUDA கையகப்படுத்திய 3.2 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது 3.2 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக 14 உயர் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டதே குற்றச்சாட்டு. இந்த அரசு நிலத்தை 2010 இல் பார்வதியின் சகோதரர் கர்நாடக மாநில நகர அபிவிருத்தி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் பார்வதிக்கு இழப்பீடாக அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இந்த மோசடி ரூ.4,000 கோடி வரை இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளன. MUDA-வால் வழங்கப்பட்ட இழப்பீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பார்வதி மற்றும் பைரதி சுரேஷுக்கு எதிரான MUDA வழக்கில் ED நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்னதாக பார்வதி மற்றும் மாநில நகர அபிவிருத்தி துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த சம்மன்களை ரத்து செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில்தான் அங்கும் மனுக்கள் தள்ளுபடி ஆகி உள்ளன.
சித்தராமையா வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது "நீதி மன்றத்தின் இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்ட தலையீடுகளுக்கு எதிரான ஒரு அடி. இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது. தேர்தல் களத்தில் உங்கள் போராட்டங்களை நடத்துங்கள். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. MUDA வழக்கில் ED தலையீடு முடிவுக்கு வந்துள்ளது" என்று சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications