உயர்ஜாதிக்கு 33% இடஒதுக்கீடு இருக்கே- பொருளாதார ரீதியாக ஏன் மேலும் 10% இடஒதுக்கீடு? திமுக கேள்வி!
டெல்லி: முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே 33 சதவீதம் இடஒதுக்கீடு முறை இருக்கும் போது முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார அடிப்படையில் ஏழைகள் என ஒரு பிரிவை உருவாக்கி மேலும் 10 சதவீதம் எதற்கு என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதத்தை முன் வைத்ததாக திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் செல்லும் என்றும் இரு நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பி வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கொடுக்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டால் மற்றவர்களுக்கு கிடைக்க முடியாமல் போய்விடுகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவுகள் உள்பட அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள்.

மேல்வகுப்பினர்
அப்படியிருக்கும் போது முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஏன் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள்?. முற்படுத்தப்பட்டோருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் நிலையில் பொருளாதாரத்தில் ஏழைகள் என ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை கொடுப்பதால் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு என்பது முற்பட்ட வகுப்பினருக்கு உத்தரவாதமாகிவிடுகிறது. இடஒதுக்கீட்டின் நோக்கம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் இடம் கொடுக்காமல் இருந்ததால்தான் இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது.

சின்ஹோ கமிஷன்
இதனால் இடஒதுக்கீட்டின் நோக்கமே பாதிக்கப்படும். இந்த பொருளாதார அடிப்படையிலான 10 சதவீதம் இடஒதுக்கீடு எப்படி கொடுக்கப்படுகிறது என்றால் சின்ஹோ (Sinho) கமிஷன் உருவாக்கப்பட்டு அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் சின்ஹோ கமிஷன் கூட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை.

இடஒதுக்கீடு
எஸ்சி, எஸ்டி, எம்பிசி ஆகியோருக்கு இடஒதுக்கீடு இருக்கும் நிலையில் இதில் விடுபட்டவர்களுக்கு ஒரு நல திட்டம் மூலம் கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்கள். அவர்கள் 2004 இல் என்எஸ்எஸ்ஓ நடத்திய சர்வேயின் அடிப்படையை கொண்டு சின்ஹோ கமிஷன் பரிந்துரை செய்துள்ளார்கள். இந்த சர்வே இந்தியாவில் 1.25 லட்சம் வீடுகளில் மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

சர்வே எடுத்தது எப்படி
அந்த வீடுகளில் குடும்பத் தலைவர்களிடம் அவர்கள் என்ன ஜாதி, என்ன வேலை செய்கிறார்கள் என்பதைதான் இந்த என்எஸ்எஸ்ஓ சேகரித்து வைத்தது. இந்த சர்வேயை வைத்துதான் இத்தனை சதவீதம் மேல் வகுப்பினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள், எத்தனை பேர் இடஒதுக்கீடு கிடைக்காமல் இருக்கிறார்கள், எத்தனை பேர் எஸ்டி, எஸ்சி பிரிவில் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் சின்ஹோ கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்ஹோ கமிஷன் அறிக்கை
எனவே சின்ஹோ கமிஷனின் அறிக்கையை மையமாக வைத்துக் கொண்டு இத்தனை அதிகமான 10 சதவீதம் அளவு இடஒதுக்கீடு கொடுப்பது என்பது தவறு. இந்த 10 சதவீதம் இடஒதுக்கீடானது முற்படுத்தப்பட்ட வகுப்பினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது என்பது சம உரிமை கொள்கைக்கு எதிராக உள்ளது. இன்றைய தினம் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தீர்ப்பு வெளியானதில் 3 நீதிபதிகள் ஆதரவாகவும் இரு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

10 சதவீதம் ஏன்
முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏன் 10% ரிசர்வேசன் கேட்கிறீர்கள் என வாதம் முன் வைக்கப்பட்டது. 33% இட ஒதுக்கீடு ஏற்கனவே மேல் வகுப்பினருக்கு உள்ளதே என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. பொருளாதரத்தை அடிப்படையாக இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என வாதம் வைத்தோம். இந்த தீர்ப்பை குறித்து மறுஆய்வு செய்வது தொடர்பாக திமுக தலைவரை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications