குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கியது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

மறுபக்கம் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இதில் பலரால் பரிந்துரைக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்த இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.












Click it and Unblock the Notifications