இந்திய பெருங்கடலில் பதற்றம்.. கெமிக்கல் கப்பல் மீது டிரோன் தாக்குதல்! இஸ்ரேலுக்கு தொடர்புடையதா?
டெல்லி: இந்திய பெருங்கடலில் லிபேரியா கொடி ஏற்றப்பட்டு இருந்த கெமிக்கல் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலில் இன்று ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக கப்பலில் வெடிபொருள் வெடித்துச் சிதறி தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மற்றொரு கடல்சார் நிறுவனம் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் அளித்து இருக்கும் விளக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது லிபேரியா நாட்டு கொடி இருந்த கப்பல் என்றும், அதற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறி இருக்கிறது.

இந்திய கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்த இந்த திடீர் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த தாக்குதல் காரணமாக கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டன் ராணுவத்தின் யுனைடெட் கிங்டம் மாரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் மற்றும் அம்ப்ரே எனப்படும் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கையில், "லிபேரியா கொடி கட்டப்பட்ட ரசாயன டேங்கர் அந்த கப்பலில் இருந்தது. இது இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடைய கப்பல்." என்று விளக்கி உள்ளன.
பிரிட்டனின் யுனைடெட் கிங்டம் மாரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் மேலும் கூறுகையில், இந்த தாக்குதல் ஆளில்லா விமானமான டிரோன் மூலம் நடத்தப்பட்டது என்றும் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை மால்டா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் இருந்து காயமடைந்த மாலுமியை இந்திய கடற்படை மீட்க உதவிய நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு அருகாமையிலேயே இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதே போன்று அரேபிய கடற்பகுதியில் உள்ள எம்வி ரூன் என்ற கப்பலில் 6 கடல் கொள்ளையர்கள் சட்ட விரோதமாக ஏறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய பெருங்கடலில் இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,












Click it and Unblock the Notifications