"தோனி அடுத்த சில ஆண்டுகள் நிச்சயம் விளையாடுவார்! காரணம் இதுதான்!" சீக்ரெட்டை உடைத்த பிராவோ
டெல்லி: ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தாண்டு தோனி விளையாடுவாரா என்பதற்கு பிராவோ சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளேஆப் சுற்றுக்குக் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் தகுதி பெற்ற நிலையில், நேற்று முதலாம் குவாலிபையர் போட்டிகள் நடந்தன.
இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்களை இழந்த 172 ரன்களை எடுத்திருந்தது. அடுத்துப் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

சிஎஸ்கே: இதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சென்னை அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இது 10ஆவது முறையாகும். குஜராத் அணி தோல்வியடைந்திருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் அவர்கள், எலிமினேட்டரில் வெல்லும் அணியை எதிர்கொள்ள உள்ளனர்.
இது தல தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், எப்படியாவது இந்தாண்டு சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ கூறுகையில், தோனி சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம் என்றும் அதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கியுள்ளார்.

விளையாடுவார்: நேற்றைய போட்டி முடிந்தவுடன் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக தோனி மேலும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும்.. அழுத்தமான சூழல்களிலும் அணியை அமைதியாக வைத்திருக்கும் அவரது திறனை ஒப்பிடவே முடியாது.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என கேட்கிறீர்கள்.. 100 சதவீதம் நிச்சயம் வருவார். இம்பேக்ட் பிளேயர் ரூல் அதற்கு நிச்சயம் உதவும். இதன் மூலம் அடுத்தாண்டு மட்டுமின்றி மேலும் சில ஆண்டுகள் வரை கூட அவரால் அணியை வழிநடத்த முடியும்.

எதற்குத் தேவை: சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை நமக்கு மிகவும் ஆழமாக பேட்டிங் இருக்கிறது. ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பேட்டிங்கில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள். எனவே, பேட்டிங்கில் நமக்கு தோனியிடம் இருந்து அதிகம் தேவையில்லை. ஆனால், இக்கட்டான நிலையிலும் அணியை வழிநடத்தி வெற்றிக்கு அழைத்து வருவதில் அவரது திறமைக்கு யாரும் நிகரில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஆட்டத்திற்குப் பிறகு ஹர்ஷா போக்லேவிடம் பேசிய தோனி, தனது ஓய்வுத் திட்டங்கள் குறித்துப் பேசியிருப்பார்.. அதாவது இந்த ஐபிஎல் முடிந்த பிறகு, அடுத்த ஐபிஎல் தொடங்க 8,9 மாதங்கள் இருப்பதாகவும் இதனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு தனக்கு போதுமான அவகாசம் இருப்பதாகக் கூறினார்.
மேலும் தோனி கூறுகையில், "நான் ஓய்வு குறித்து இன்னும் எதுவும் யோசிக்கவில்லை. டிசம்பரில் மினி ஏலம் நடக்கும்.. அதற்குள் எதற்காக ஓய்வு குறித்து யோசிக்க வேண்டும்? முடிவு செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணியில் நான் எப்போதும் இருப்பேன். விளையாடினாலும் சரி, வெளியே நிர்வாகத்தில் இருந்தாலும் சரி நிச்சயம் அணியில் தொடர்வேன்" என்றார்.












Click it and Unblock the Notifications