லோக்சபா வரை சென்ற லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி விவகாரம்.. மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கியது தொடர்பாக புயலை கிளப்ப விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 4ம் தேதி (இன்று) தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை 19 நாட்கள் நடக்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். அதோடு மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும். கூட்டத்தொடரை முடக்க வேண்டாம் என அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரகலாத் ஜோஷி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என இருசபைகளும் இன்று கூட உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதாவது மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை பிரதமர் அலுவலகத்தின் பெயரை கூறி மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இதுபற்றி மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‛‛லோக்சபாவில் அமலாக்கத்துறைக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளேன். இதுபற்றி நாடாளுமன்றத்தில் கட்டாயம் விவாதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications