"உடைந்த சேர்கள்.." டெல்லியில் அமலாக்க துறை அதிகாரிகள் மீது தாக்குதல்.. சோதனைக்கு சென்ற அதிகாரி காயம்
டெல்லி: டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொபைல் செயலி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்புடைய வழக்குகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு ரெய்டுகளையும் அமலாக்கத் துறையினர் நடத்துவார்கள்.

தாக்குதல்: பொதுவாக இதுபோல ரெய்டு செல்லும் போது பாதுகாப்பிற்கு உடன் போலீசாரை அழைத்துச் செல்வார்கள். மேலும், ரெய்டு சமயத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே விதியாகும். ஆனால், டெல்லியில் ரெய்டு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது மொபைல் செயலி மோசடி குறித்த வழக்கை டெல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதுதொடர்பான விசாரணைக்குச் சென்ற போது டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. விசாரணைக்குச் சென்ற அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து இப்போது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் சர்மா மற்றும் அவரது சகோதரர் உட்பட குடும்பத்தினர் அமலாக்கத் துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோசடி: PYYPL என்ற செயலி தொடர்பாக விசாரணை நடந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் சர்மா மற்றும் அவரது சகோதரர் உட்பட குடும்பத்தினர் சேர்ந்து கொண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரிகள் ஒருவாறு நிலைமை சமாளித்து ரெய்டை தொடர்ந்துள்ளனர்.
ஃபிஷிங், QR குறியீடு மோசடி, பகுதி நேர வேலை தருவதாக மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து நிதிப் புலனாய்வுப் பிரிவிடம் வந்த தகவல் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். இந்த சைபர் மோசடிகள் மூலம் கிடைத்த பணம் சுமார் 15,000 போலிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு அவை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னணியில் யார்: தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐக்கிய அமீரகத்தைத் தளமாகக் கொண்ட Pyypl என்ற நிறுவனத்திற்குப் பணம் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இந்த மோசடி நிதியை வைத்து கிரிப்டோ கரன்சி வாங்கப்பட்டதும் தெரிய வந்தது. சில பட்டய கணக்காளர்கள் இணைந்து இந்த மோசடியைச் செய்து வந்துள்ளனர். அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications