போதையில் நடுவானில் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த முதியவர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பயணிக்கு போதை தலைக்கேறியதால் அவர் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக விமானத்தில் பெண் மீது பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த நபரின் வேலையும் பறிபோனது. இது போல் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு முகம் சுளிக்கும் செயல்களை பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு விமான போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விமானத்தில் நடுவானில் விமான பணியாளரிடம் போதை பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆம்! அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலாஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் முதல் வகுப்பில் டேவிட் ஆலன் பர்க் (61) என்ற முதியவர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். பின்பு விமானம் டேக் ஆப் ஆனதும் எல்லாரையும் போல் அந்த முதியவருக்கும் மதுபானம் கொடுக்கப்பட்டது.
அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் விமான ஆண் பணியாளரிடம் ரகளை செய்ததாக தெரிகிறது. மேலும் விமான ஊழியரிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது என கூறியதுடன் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தில் முத்தம் கொடுத்துவிட்டார்.

அத்தோடு விடாமல் விமானிக்கு கொண்டு சென்ற உணவையும் பிடுங்கி கீழே கொட்டி நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் அமர்க்களம் செய்த முதியவரை பயணிகள் பிடித்து சமாதானம் செய்து 1 மணி நேரம் கழித்து இருக்கையில் உட்கார வைத்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த தகராறு குறித்து விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானி தகவல் தெரிவித்தார்.
அலாஸ்காவில் விமானம் தரையிரங்கியது. உடனே முதியவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் தான் எந்த தவறையும் செய்யவில்லை. மது மட்டுமே அருந்தினேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த முதியவர் தனக்கு முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டிய விமான பணியாளரின் புகாரின் பேரில் அந்த பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு அந்த முதியவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விடுவித்தனர். இதையடுத்து வரும் 27 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். நடுவானில் அத்தனை அட்டூழியத்தையும் செய்துவிட்டு அந்த முதியவர் நான் அவனில்லை பாணியில் நடித்ததுதான் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.












Click it and Unblock the Notifications