அரசியல் சாசனத்தை பாஜக ஒழிக்கும் என பிரசாரம் செய்யக் கூடாது.. காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
டெல்லி: நாட்டின் அரசியல் சாசனத்தை பாஜக ஒழித்துவிடும் என்று லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் பேச்சாளர்கள் பேசக் கூடாது என அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ராணுவ விவகாரங்களையும் தேர்தல் பிரசாரங்களில் பேசக் கூடாது எனவும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. 6-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் மே 25-ந் தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் பேசும் பேச்சுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இதனையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களான ஜேபி நட்டா, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய பிரசாரங்களை கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்; மதம், ஜாதி அடிப்படையில் பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், இந்திய அரசியல் சாசனத்தை பாஜக ஒழித்துவிடும் என்கிற தவறான தகவலையும் கருத்தையும் பரப்பக் கூடாது. அக்னி வீரர் திட்டம் தொடர்பாக விமர்சிக்கும் போது நாட்டின் ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
அத்துடன், இரு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; இரு கட்சிகளின் பேச்சாளர்களும் நிதானத்துடன் பேச வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் கட்சிகள் கூடுதல் பொறுப்புடன் நடக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் வரம்பை மீறவும் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து பேசி வருகிறார். காங்கிரஸ்தான் முஸ்லிம்களுக்கு சொத்துகளை வாரி கொடுக்கப் போகிறது; இடஒதுக்கீட்டை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தரப் போகிறது எனவும் பேசி வருகிறார் பிரதமர் மோடி.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி தலைவர்கள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனத்தை ஒழித்துவிடுவார்கள் என குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications