சிவசேனா உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு உதய சூரியன் நோ- தீப சுடர் தந்தது தேர்தல் ஆணையம்-ஹைகோர்ட்டில் மனு!
டெல்லி: சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே கோஷ்டி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சிவசேனா உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு தீப சுடர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி சில மாதங்களுக்கு கவிழ்ந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகக் குரல் எழுப்பியதால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்தார்.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு கோஷ்டிகளும் உண்மையான சிவசேனா தாங்களே என உரிமை கோரின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் இரு கோஷ்டிகளும் மனு தந்தன.
இதனிடையே அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் சிவசேனா கட்சியின் பெயர், வில் அம்பு சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கி உத்தரவிட்டது. அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா சின்னம், பெயரை இரு கோஷ்டிகளும் பயன்படுத்த முடியாத நிலைமை உருவாகிவிட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே கோஷ்டி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதேபோல் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியும் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
அதேநேரத்தில் புதிய பெயர், சின்னம் குறித்து சிவசேனாவின் இரு கோஷ்டிகளிடமும் பரிந்துரை கேட்டது தேர்தல் ஆணையம். உத்தவ் தாக்கரே கோஷ்டியானது திரிசூலம், உதய சூரியன், தீபச் சுடர் உள்ளிட்டவற்றை கோரியது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பெயர் ஒதுக்கீடு செய்தது. மேலும் உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு தீப சுடர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு Balasahebanchi Shivsena என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications