லெட்டர்பேடு கட்சிகளுக்கு ஆப்பு வைக்க திட்டம்.. அரசுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் தேர்தல் ஆணையம்!
டெல்லி : அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ள நிலையில், சில முகாந்திரங்களில் அந்தப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரமும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தவிர 2,800க்கும் மேற்பட்ட லெட்டர்பேட் கட்சிகள் உள்ளன. இவை செயல்படாமல், சில சலுகைகளுக்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெயருக்கு மட்டுமே உள்ள லெட்டர்பேட் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகிறது தேர்தல் ஆணையம்.

பதிவை ரத்து செய்யும் அதிகாரம்
அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். இதற்காக பலர் பெயருக்கு ஒரு கட்சியை பதிவு செய்து சலுகைகளை பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தலில் போட்டியிடாமல் சலுகைகளை மட்டுமே பெறும் இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

லெட்டர்பேட் கட்சிகள்
நம் நாட்டில் 8 கட்சிகள் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 50 கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2,800க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக உள்ளன. இதில் பலநூறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல், வெறும் ‘லெட்டர்பேட்' கட்சிகளாக மட்டுமே உள்ளன.

அங்கீகாரம் ரத்து
சமீபத்தில், போலியான முகவரியில் இயங்கி வந்த 198 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மற்றும் மோசடியில் ஈடுபட்ட சில கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
Recommended Video

அழுத்தம் கொடுத்த ஆணையர்
இந்நிலையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அங்கீகாரம் உள்ளதைப்போல குறிப்பிட்ட சில முகாந்திரங்களில், கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில், மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இதுகுறித்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு செவிமடுத்தால் லெட்டர்பேட் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications