"ஆதாரம் எங்கே ராகுல் காந்தி.. இல்லைனா மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.." தேர்தல் ஆணையம் பதிலடி
டெல்லி: ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் இன்று விளக்கமளித்துள்ளது. 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையம், அப்படியில்லை என்றால் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். வாக்காளர் பட்டியலில் பல போலி வாக்காளர்கள் இருப்பதாகவும் ஒரே நபர் பல தேர்தல்களில் வாக்களிப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு ஆதாரம் என சொல்லி அவர் வாக்காளர் பட்டியல் போட்டோக்களையும் பகிர்ந்தார். மேலும், பெங்களூரில் ஒரு சிறிய வீட்டில் 50+ பேர் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியை தொடர்ந்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாகப் பேச ஆரம்பித்திருந்தனர். இதற்கிடையே இன்றைய தினம் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்தனர். அப்போது வாக்கு திருட்டு புகாரைத் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், வாக்கு திருட்டு என்ற வார்த்தையே அரசியலமைப்பிற்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் சாடினர்.
மேலும், ராகுல் காந்தியிடம் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்..
மன்னிப்பு கேட்க வேண்டும்
இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இரண்டே வழி தான்.. ஒன்று இது தொடர்பாக அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்; மூன்றாவது வழி இல்லை. ஏழு நாட்களுக்குள் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், அவரது குற்றச்சாட்டுகள் தவறானவை என்று அர்த்தம்" என்று அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாத பட்சத்தில், அத்தகைய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும் ஆணையம் கூறியுள்ளது.
ராகுல் காந்தி
முன்னதாக, தேர்தல் ஆணையம் தன்னை மட்டும் வாக்காளர் திருட்டுக் குற்றச்சாட்டுகளுக்காகப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கக் கேட்பதாகவும், ஆனால் பாஜக தலைவர்களிடம் அப்படிக் கேட்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சசராம் நகரில் 'வாக்காளர் அதிகார் யாத்திரை' தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
ஏன் என்னிடம் மட்டும்?
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "வாக்கு திருட்டு பற்றி நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது, தேர்தல் ஆணையம் என்னிடம் பிரமாணப் பத்திரம் கேட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன் பாஜக தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது, அவர்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கப்படவில்லை. 'உங்கள் டேட்டா சரியானவை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. இந்தத் தரவு தேர்தல் ஆணையத்திற்குச் சொந்தமானது. என்னிடம் மட்டும் ஏன் பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications