மணிப்பூரில் உச்சத்தில் வன்முறை.. அமித் ஷா தலைமையில் 2வது நாளாக ஆலோசனை! கூடுதல் படைகளை அனுப்ப முடிவு
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மீண்டும் இப்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அமைதியை மீட்டெடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே மணிப்பூர் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பைரன் சிங் முதல்வராக இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குக் கடந்த இரு ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

குக்கி - மைத்தேயி இன மக்களிடையே மோதல் நிலவியது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது. இந்தச் சூழலில் அங்கு மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: அங்கு ஜிரிபம் மாவட்டத்தில் மைத்தேயி இன மக்கள் சிலர் மாயமான நிலையில், அவர்கள் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டதே மீண்டும் வன்முறை வெடிக்கக் காரணமாகும். அங்கு மீண்டும் வன்முறை தலைதூக்கி இருக்கிறது. எம்எம்ஏக்கள் இல்லங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்து வருகிறது. நிலைமை மிக மோசமாக இருப்பதால், அங்குப் பல மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா: மணிப்பூரில் திடீரென நிலைமை மோசமானதால் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமித் ஷா, தனது பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இதற்கிடையே மணிப்பூரில் நிலவும் வன்முறை குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடந்துள்ளது.. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் அங்குப் பாதுகாப்புப் பணியைத் தீவிரப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட மணிப்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அமித் ஷா கேட்டறிந்தார். அங்கு அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் மாநில போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பாதுகாப்புப் படை: ஏற்கனவே அங்கு 20 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 50 மத்திய ஆயுத போலீஸ் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த 6 பேர் கடத்தல் உட்பட மூன்று வழக்குகள் குறித்த விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மணிப்பூரில் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்தன. ஜிரிபாம் மாவட்டத்தில் ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இப்படி மணிப்பூரில் நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அங்குள்ள தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றது. மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிவிட்டது கூறி தேசிய மக்கள் கட்சி தனது ஆதரவைத் திரும்பப் பெற்றது.












Click it and Unblock the Notifications