வேலை இருக்கு.. ஆனா சம்பளம் உயரல! இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக இதுதான் நிலைமை! ஆய்வில் ஷாக்
டெல்லி: இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும், ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறியுள்ளார்.
இதற்கு காரணம் தொழிலாளர்கள் மத்தியில் போதுமான திறன் இல்லாததுதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இவரது கருத்துக்கள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு காலண்டுக்கும், PLFS கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு (Employment) மற்றும் வேலை இல்லா நிலை (Unemployment) குறித்த தகவல்களை சேகரித்தல்தான் இந்த கணக்கெடுப்பின் நோக்கம். இந்த கணக்கெடுப்பில் கிடைத்த தகவல்களை PTI செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது அரவிந்த் பகிர்ந்திருந்தார். அவர் கூறியதாவது,
"PLFS தரவுகளின்படி கடந்த 7 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் அடிப்படையில் இது தெரிய வந்திருக்கிறது.
உதாரணமாக ஒரு ஊரில் 1000 பேர் இருக்கிறார்கள் எனில், அதில் 400 பேர் வேலை செய்கிறார்கள். அப்படி என்றால் ஊரில் மொத்தம் வேலை செய்பவர்களின் சதவிகிதம் 40. இந்த சதவிகிதம் குறைந்தால் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கிறது என்று அர்த்தம். அதிகரித்தால் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்று பொருள்.
தற்போது ஆய்வுகளின்படி தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் 2023-24 (ஜூலை-ஜூன்) நிலவரப்படி 43.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017-18ம் ஆண்டு 34.7 சதவிகிதமாக இருந்தது. எனவே வேலை வாய்ப்பு அதிகரிக்கவில்லை என்று சொல்வது தவறு.
ஆனால், இந்த 7 ஆண்டுகளில் சாதாரண தொழிலாளர்களை விட மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது. இப்போது இருக்கும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் உயரவில்லை. இதற்கு காரணம் தொழிலளார்களிடையே திறன் இல்லாததுதான். திறன் இல்லாதவர்களை பணியமர்த்துவதன் மூலம் நாம் பலவீனமாக இருக்கிறோம். மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
மத்திய அரசு இந்த பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும். மாவட்ட அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். திறன் அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரித்தால் சம்பளம் தானாக அதிகரிக்கும். எங்கள் ஆய்வின்படி, கல்வியின் ஒவ்வொரு மட்டத்திலும் திறன் வளர்ப்பு என்பது மிக முக்கியம்.
AI (செயற்கை நுண்ணறிவு) அல்லது மின்னணு பொறியாளராக மாறுவதற்கு மட்டுமே திறன் தேவை என்று அர்த்தமல்ல. பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் சிறார்கள் இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களாக வரும்போது திறன் தொடர்பான சிக்கலை எதிர்கொள்கிறார்கள். எனவே அவர்களையும் உள்ளடக்கிய திறனை வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அரவிந்தின் இந்த கருத்துகள் கேட்க சரியானதாக இருந்தாலும், திறமை வியஷத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என தொழிலாளர் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு அரசு பள்ளியில் பயிலும் மாணவனும், தனியார் நிறுவனத்தை சேர்ந்த சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவனும் கல்வி முடித்து வெளியே வரும்போது இருவரின் திறன்களும் வெவ்வேறாக இருக்கும். இதற்கு காரணம் யார்?
மறுபுறம் அதிக உற்பத்திக்கு அதிக ஆட்கள் தேவை. ஆனால் குறைந்த ஆட்களை கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு பெயர்தான் திறன் என்று கார்ப்பரேட்டுகள் கூறுகின்றனர் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக என்னையும், உங்களையும் போன்ற மாத சம்பளக்காரர்களின் ஊதியம் பணவீக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு உயரவில்லை என்பது மட்டும் நிஜம்.












Click it and Unblock the Notifications