2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரும்... மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை
டெல்லி: 2021 பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிபுணர் குழுவில் ஹைதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர் தலைமையில் 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், இப்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து நீட்டித்தால் அடுத்தாண்டு (2021) பிப்ரவரி மாதத்துக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மேலும் அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 30% மக்கள் ஆண்டிபாடிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதாலும், குளிர்காலம் வரவிருப்பதாலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஊரடங்கோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுவிடக்கூடாது என்றும் தொடரவேண்டும் எனவும் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்படுத்துதல் விவகாரத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மேலும், சரியான நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடிந்ததாக அந்தக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.