மத்திய அரசுடன் வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை... விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டம்..!
டெல்லி: புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசுடன் வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவீர்களா? இல்லையா? என்பதை மட்டும் தங்களுக்கு தெரிவிக்குமாறும் மற்றபடி சுற்றி வளைத்து பேசுவதற்கு இதில் ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளனர்.
இதனிடையே நாளை எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து 5 பேர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட உள்ளனர்.

டெல்லி சலோ போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வருகின்றன. இதனால் இதனை தன்மானப் பிரச்சனையாக கருதும் மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

சுமூக உடன்பாடில்லை
ஆனால் போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளோ இம்மியளவு கூட பின்வாங்கமாட்டோம் என நெஞ்சுயர்த்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் நாளை 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சுற்றி வளைத்து
இதற்கு முன்னதாக அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், வழ வழ கொழ கொழவென்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவரிடம் திட்டவட்டமாக தெரிவிப்போம் எனக் கூறியுள்ளனர். மேலும், தங்களுக்கு தேவை ஆம் இல்லை என்ற பதில்தானே தவிர சுற்றிவளைத்து பேச எதுவும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

குடியரசுத் தலைவர்
இதனிடையே விவசாயிகள் கோரிக்கை மற்றும் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் முறையிடப்படவுள்ளன. ராகுல்காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications