4 மாதங்களை தாண்டிய விவசாயிகள் போராட்டம்.. நாளை பாரத் பந்த் போராட்டம்.. போக்குவரத்து சேவை பாதிப்பு?
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் நாளை பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் போராட்டம் தொடங்கி நாளையும் நான்கு மாதங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இருப்பினும் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மட்டும் இந்த பாரத் பந்த் போராட்டம் நடைபெறாது என்று விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் பெருவாரியான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள கடைகள் திறக்கப்படாது என்று வணிக கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.
அதேபோல ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சியும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார்மயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துள்ள அம்மாநில அரசு, பாரத் பந்த் போராட்டத்திலும் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி ஆந்திராவில் உள்ள அரசு அலுவலகங்கள் நாளை மதியம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சேவைகளும் நாளை மதியம் முதலே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.