டெல்லி ஜந்தர் மந்தரில் களைகட்டிய விவசாயிகள் நாடாளுமன்றம்... பேச்சுவார்த்தை தயார்- வேளாண் அமைச்சர்
டெல்லி: டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட டெல்லியில் போராடும் விவசாயிகள் பங்கேற்றனர். இதனிடையே விவசாய சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் 8 மாதங்களாக, மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் இதுவரை போராட்டங்களை தொடர்ந்தனர்.
தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனால் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர்.
ஜந்தர் மந்தர் போராட்ட்டம்
அதேநேரத்தில் டெல்லி எல்லைகளில் முகாமிட்டிருக்கும் விவசாயிகளில் 200 பேர் மட்டுமே ஜந்தர் மந்தர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்; தாங்களே பேருந்தில் அழைத்து வருகிறோம் என போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து டெல்லி எல்லைகளில் இருந்து இன்று காலை பேருந்துகள் மூலம் ஜந்தர் மந்தருக்கு 200 விவசாயிகள் அழைத்துவரப்பட்டனர். அப்போது போலீசாருடன் விவசாயிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகள் நாடாளுமன்றம்
ஒருவழியாக ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்த பின்னர், விவசாயிகள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்ச்சியாக, 8 மாத போராட்டங்களில் உயிர் நீத்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மத்திய அரசு 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற வளாகம்
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வந்த போது அவருக்கு எதிராக விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறும் வாசகங்களை பஞ்சாப் எம்.பி.க்கள் பதாகைகளில் ஏந்தியபடி காண்பித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர சிங் தோமர், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
மத்திய அரசு பேச தயார்
இந்த விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். சட்டப்படியாக விவசாய சட்டங்கள் மீதான கருத்துகளை விவசாயிகள் தெரிவித்தால் அவற்றை நாங்கள் ஆராயவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.