விவசாயிகள் போராட்டம்...இன்டர்நெட் சேவை கட்... மத்திய அரசு உத்தரவு
டெல்லி : விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் 24 மணி நேரம் இன்டர்நெட் சேவையை நிறுத்த மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 3 மணிநேரம் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்த உடனேயே, விவசாயிகள் போராட்டம் நடைபெறும் சிங்கு, காசிபூர், திக்ரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரம் இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இரவு வரை இந்த இன்டர்நெட் சேவை முடக்கம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பை காக்கவும், பொது அவசர நிலையை தவிர்ப்பதற்காகவும் 2017 விதிகளின்படி தற்காலிகமாக தொலைத் தொடர்பு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இதே பகுதிகளில் ஜனவரி 29 ம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 31 இரவு 11 மணி வரை இன்டர்நெட் சேவை முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பிறகு இந்த முடக்கம் பிப்ரவரி 2 வரை நீட்டிக்கப்பட்டது.
உத்திர பிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி தவிர்த்து பிறகு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலும் பஞ்சாப், அரியானாவுக்கு இடைப்பட்ட சாலைகளிலேயே அதிக அளவில் சாலை மறியல் நடத்தப்பட்டது. சங்ரூர், லூதியானா உள்ளிட்ட பகுதிகளில் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications