அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு.. டிச. 14-ம் தேதி பாஜக அலுவலகங்கள் முற்றுகை..!
டெல்லி: அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வருமாறு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், டிசம்பர் 14-ம் தேதி பாஜக அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பதற்றமான சூழல் உருவாகி வருவதால் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாய சட்டம்
புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 13-வது நாளாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இதுவரை 4 முறைக்கு மேல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர்.

திட்டவட்டம்
ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. புதிய விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அரசு தயாராக இல்லை என்பதை இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் விவசாயிகள் அறிந்துகொண்டனர். இதனால் இனியும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 14-ம் தேதி
இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி டெல்லி-ஆக்ரா சாலை மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது மட்டுமின்றி டிசம்பர் 14-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு முயற்சி
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால், விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications