சவுக்கு சங்கர் பேட்டி.. பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திரும்ப கிடைத்த யூடியூப் சேனல்.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய குற்றச்சாட்டில் கைதான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு, ஜாமீன் தருவதற்கு நிபந்தனையாக யூடியூப் சேனலை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 6ம் தேதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஜாமீன் நிபந்தனையாக பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை மூட பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்த சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் வைத்து கைது செய்தனர்.

இதனிடையே அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவரை திருச்சி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கடந்த மே மாதம் 10-ந்தேதி கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
சுமார் 80 நாட்களை தாண்டி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே சமயம் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து பெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.வைரவன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில், 'யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'யூடியூப் சேனலை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பி்த்த உத்தரவு தேவையற்றதாகும், தேவைக்கு அதிகமானதாகவும் இருக்கிறது. மனுதாரர் பெலிக்ஸ் ஜெரால்டை வேறு நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறியது.
இதன்படி, ஜாமீன் நிபந்தனையாக பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை மூட பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் டியூப் சேனலை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு கடந்த 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையை உறுதி செய்வதாக கூறியதுடன், இதன்படி இந்த ரிட் மனு முடித்து வைக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications