ஜிஎஸ்டி எண் வாங்க லஞ்சம்.. பிரபல தொழில் அதிபர் பதிவுக்கு நேரடியாக பதில் அளித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: விஜி லேர்னிங் டெஸ்டினேஷன் நிறுவனர் மற்றும் இயக்குநரான வினோத் குப்தாவின் லிங்க்ட்இன்னில் வெளியிட்ட பதிவில், ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்து 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என்றும், லஞ்சம் கொடுத்தால் தான் கிடைக்கும் என்றால், லஞ்சம் கொடுக்கும் தவறை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார். வினோத் குப்தாவின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே நேரடியாக அவருக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் ஒருவர் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் அல்லது தொழில் தொடங்கவேண்டும் என்றால் ஜிஎஸ்டி பதிவு எண் வாங்க வேண்டும். அப்படி ஜிஎஸ்டி பதிவு எண் வாங்க வேண்டும் என்றால், அவருடைய முகவரி, தொழில் தொடங்க உள்ள இடம், பணியாளர்கள் எண்ணிக்கை உள்பட பல்வேறு தகவல்களை தர வேண்டும். அப்போது தான் ஜிஎஸ்டி எண் கிடைக்கும். இந்நிலையில் இ வி.ஜி.லெர்னிங் டெஸ்டினேஷனின் நிறுவனரும், இயக்குநருமான வினோத் குப்தா லிங்கிடுஇன்-ல் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வினோத் குப்தாவும், அவரது மனைவியும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர். அதனை இருவரும் இணைந்து நடத்த உள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் எண் விரைவாக கிடைக்கலாம் என்று வினோத் குப்தா கூறியிருந்தார்.
இது தொடர்பாக வினோத் குப்தா வெளியிட்ட பதிவில், "நாளை நான் ஒரு குற்றம் செய்ய போகிறேன். லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் ஆகும். எனது மனைவியும் மகளும் கூட்டாளிகளாக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண் பெற 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தேன்.
ஆட்சேபனைகள் வரத்தொடங்கி இருக்கிறது. தற்போது வரை, ஜிஎஸ்டி எண் எனக்கு அவர்கள் வழங்கவே இல்லை. அதனால் நான் நாளை ஜிஎஸ்டி எண்ணைப் பெற குற்றம் (லஞ்சம்) செய்ய முடிவு செய்துள்ளேன். அந்தக் குற்றத்தை (லஞ்சம்) நான் செய்த பின்பு எனக்கு கட்டாயம் ஜிஎஸ்டி எண் கிடைக்கும் என்பது தெரியும்" என்று வினோத் குப்தா கூறியிருந்தார்.
இந்த பதிவு கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் ஜிஎஸ்டி பதிவு எண் வழங்கும் மத்திய அரசு நிறுவனமான மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.இதையடுத்து உடனே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே, வினோத் குப்தாவின் வைரலான பதிவிற்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "வரி செலுத்துவோருக்கு சேவை செய்வது எங்கள் பொறுப்பு. ஆனால் அதைச் செய்யும்போது, நாம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அப்படித்தான் நாம் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஜிஎஸ்டி வாரியமும் அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதில் தொடர்ந்து கவனமாகவும் விரைவாகவும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து வினோத் குப்தாவின் சர்ச்கைக்குரிய குற்றச்சாட்டுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) விரிவான பதில் அளித்திருந்தது. அதில், "வினோத் குப்தாவின் விண்ணப்பம் மே 26-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது டெல்லி ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் வருகிறது. மத்திய ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
அவரது விண்ணப்பத்தில் வாடகை ஒப்பந்தத்தில் பெயர் இல்லை என்றும், இதுபற்றி வினோத் குப்தாவிடம் கேட்கப்பட்டிருந்தது என்றும் ஆனால், அவர் அதற்கு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் தாமதம் குறித்த குற்றச்சாட்டு சிபிஐசி விளக்கம் அளித்துள்ளது. மேலும், வினோத் குப்தாவின் பதிவினை கண்டித்திருக்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications