என்ன சொல்றீங்க? முதலில் கோதுமை! இப்போது நெல்.. குறையும் விளைச்சல்! விலை உயருமா? பற்றாக்குறை ஏற்படுமா
டெல்லி: இந்தியாவில் ஏற்கனவே கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது நெல்லுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல்- மே மாதங்களாகக் கோடைக் காலத்தில் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. இதன் காரணமாகக் கோதுமை விளைச்சல் நாட்டில் கணிசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில் இப்போது நாட்டின் பல மாநிலங்களிலும் மழை குறைந்துள்ளதால் காரீஃப் பருவத்தின் முக்கிய பயிரான நெல் விளைச்சலும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

அரிசி
உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் பருவமழை காலத்தில் போதிய மழையைப் பெறவில்லை. அதே நேரத்தில் அசாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ்.சந்திரசேகரன் கூறுகையில், "இதன் காரணமாக சுமார் 15 மில்லியன் டன் அரிசி உற்பத்தி ஆபத்தில் இருக்கக்கூடும். கிழக்கு இந்திய மாநிலங்களில் பற்றாக்குறை மழை காரணமாக, விளைச்சல் குறைவாக இருக்கும்

விளைச்சல் குறையும்
இதனால், கோடைக் காலத்தில் விளையும் குறைந்த அளவு விளைச்சலைத் தரும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறலாம். குஜராத்தில் இப்படி தான் பல விவசாயிகள் நெல் சாகுபடியில் இருந்து பருத்திக்கு மாறியுள்ளன. தெலுங்கானாவில் அதிக மழை பெய்துள்ளது விளைச்சலைக் கடுமையாகப் பாதித்து உள்ளது" என்றார், அரிசி விளைச்சல் குறையும்பட்சத்தில் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

விளைச்சல் குறையும்
இந்தாண்டு நாட்டின் கோதுமை உற்பத்தி, கடந்த ஆண்டை விட 3 சதவிகிதம் குறைவாக, அதாவது 106 மில்லியன் டன்களாக இருக்கும் மத்திய அரசு மதிப்பிட்டு இருந்தது. ஆனால், விவசாயிகளோ 95 மில்லியன் டன்கள் முதல் 100 மில்லியன் டன்கள் வரை தான் அறுவடை இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்படலாம். ஆனால், இந்த அச்சம் மக்களுக்குத் தேவையில்லை. ஏனென்றால், மத்திய அரசு ஆபத்தான காலங்களில் பயன்படுத்த ஏதுவாக தேவையைக் காட்டிலும் 3 மடங்கு அரசி மற்றும் கோதுமையைச் சேமித்து வைத்துள்ளது. இதனால் நாம் எப்போதும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளப் போவது இல்லை.

பயம் தேவையில்லை
இதனிடையே சீரற்ற மழை காரணமாக நாட்டில் சுமார் 10 மில்லியன் டன் அரிசி விளைச்சலும் குறையலாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்காக நாம் பீதியடையத் தேவையில்லை என்றாலும் கூட எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். விளைச்சல் குறைந்துள்ளதால் அரசுக்கான ஆப்ஷன்களும் குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்படலாம்
விளைச்சல் குறைந்துள்ளதால் அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் மத்திய அரசின் இலவச உணவுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானிய திட்டம் நிறுத்தப்படலாம். மேலும் ஏற்றுமதி வரி உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் கூட விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இந்தியா முக்கிய நாடு
அரிசி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, சர்வதேச அளவில் இந்தியா தான் முக்கிய நாடாகும். சர்வதேச அளவில் அரிசி வர்த்தகத்தில் 40 சதவீத பங்கை இந்தியா தான் கொண்டு இருக்கிறது. கடந்த 2021-22ஆம் ஆண்டில், இந்தியா 127.9 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்திருந்த நிலையில், அது 21 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. நடப்பு காரீஃப் பயிர் பருவத்தில், இந்தியா 112 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. மீதியை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இருந்து அறுவடை செய்வே திட்டமாக இருந்தது. இருப்பினும், இப்போது பருவ மழை சீரற்ற பெய்து வருவதால், இந்த இலக்கை எட்ட முடியாமல் போகலாம்!












Click it and Unblock the Notifications