Flashback 2021:இந்தியாவின் வேக்சின் பணிகள்..347 நாட்களில் 143கோடி டோஸ்கள்! சாதித்து காட்டிய இந்தியா
டெல்லி: இந்தியாவில் இதுவரை 143 லட்சம் கொரோனா டோஸ்கள் போடப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் வேக்சின் பணிகள் என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
Recommended Video
கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சமடைந்த போது, பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது கொரோனா வேக்சின் எப்போது வரும் என்று தான். ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடந்த ஆண்டே கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன.
மும்பையில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா உறுதி- 82% அதிகரிப்பு!
இந்தியாவில் கடந்த ஜனவரி 1இல் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மறுநாள், ஜன.2இல் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவரசக்கால அனுமதி அளிக்கப்பட்டது.
கோவிஷீல்டு & கோவாக்சின்
ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த வேக்சினை தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. அதேநேரம் கோவாக்சின் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாராகிக்கப்பட்ட ஒன்றாகும். இது செயலிழக்க வைக்கப்பட்ட வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட வைரசாகும். கோவாக்சின் 3ஆம் கட்ட சோதனை முடிவுகள் முடியும் முன்னரே அனுமதி வழங்கப்பட்டதால் சிலர் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்தனர்.
வேக்சின் பணிகள்
எல்லாம் தாண்டி இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் உட்பட மொத்தம் 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 3,006 வேக்சின் செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் முதல் நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1ஆம் தேதிக்குள் 3 கோடி பேருக்கும் வேக்சின் போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், வெறும் 1.4 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
2ஆம் கட்ட வேக்சின் பணிகள்
அடுத்து மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம்கட்ட வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த கட்டத்தில் 60 வயதைக் கடந்த முதியவர்கள் 45 வயதைக் கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பாஜக மூத்த அமைச்சர்கள், முதல்வர்கள் எனப் பலரும் வேக்சின் எடுத்துக் கொள்ளத் தொடங்கினர். ஏப்ரல் 1 முதல் 45 வயதை கடந்த அனைவரும் வேக்சின் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் டெல்டா கொரோனவால் 2ஆம் அலை உச்சமடையத் தொடங்கியது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை கூட ஒரு கட்டத்தில் சென்றது. அப்போது நாட்டில் கொரோனா வேக்சினுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. நாட்டு மக்களுக்கு வேக்சின் அளிப்பதில் முக்கியத்துவம் தராமல் கொரோனா வேக்சினை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததே பற்றாக்குறை ஏற்படக் காரணம் எனப் பலரும் விமர்சித்தனர். இதையடுத்து மார்ச் மாதம் வேக்சின் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது.
3ஆம் கட்ட வேக்சின் பணிகள்
இந்தியாவில் 3ஆவது கொரோனா வேக்சினாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த ஏப்ரல் 12இல் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி 3ஆம் கட்ட வேக்சின் பணிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே 1ஆம் தேதி முதல் வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதில் 45 வயதைத் தாண்டியவர்களுக்குத் தேவையான வேக்சின் மத்திய அரசு கொள்முதல் செய்து அளிக்கும் என்றும் 18-45 வயதுடையவர்களுக்கு மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்யக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
முதலில் தயக்கம்
முதலில் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளப் பலரும் தயக்கம் காட்டினர். இதனால் வேக்சின் பணிகள் மந்தமாகவே நடைபெற்றது. ஆனால் 2ஆம் அலை ஏற்படுத்திய மோசமான பாதிப்பைப் பார்த்த பிறகு பலரும் வேக்சின் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால் அதிகாலை நேரம் முதலே வேக்சின் மையங்களில் பொதுமக்கள் குவிய தொடங்கினார். பல இடங்களில் இது தொடர்பாகப் பொதுமக்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கே வேக்சின் உற்பத்தி இருந்தது. பல மாநில அரசுகளால் வேக்சின் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியவில்லை.
தடுப்பூசி கொள்கை
மத்திய அரசின் இந்த தடுப்பூசி கொள்முதல் கொள்கை தொடர்பாக மே மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 7ஆம் தேதி பழைய முறையிலேயே வேக்சின் கொள்முதல் நடக்கும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதாவது 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசியை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும். மருந்து நிறுவனங்கள் 75% வேக்சினை மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். மீதி 25% தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 21ஆம் தேதி இந்த முறை அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் நாளில் மட்டும் 8.27 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டது. இது தான் அப்போது ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச டோஸ்களாக இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 29ஆம் தேதி நாட்டில் மாடர்னா வேக்சினுக்கும், ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜான்சன் வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியாவில் 50 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டது.
முதல் டிஎன்ஏ வேக்சின்
அதைத் தொடர்ந்து 6ஆவது வேக்சினாக உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியான ZyCoV-Dக்கு ஆகஸ்ட் 20இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதியில் 50% இந்தியர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 99% சுகாதார ஊழியர்களுக்கும் 100% இதர முன்களப் பணியாளர்களுக்கும் வேக்சின் போடப்பட்டது. அதே சமயத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டது. செப். முதல் வாரத்தில் சிக்கம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, கோவா, லடாக் மற்றும் லட்சத்தீவு 100% ஒரு டோஸ் போடப்பட்டது.
பிரதமர் மோடி பிறந்த நாள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப். 17ஆம் தேதி இந்தியாவில் வேக்சின் செலுத்தும் பணிகள் புதிய சாதனையைப் படைத்தது. அன்றைய தினம் மட்டும் இந்தியாவில் 2.5 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டது. இதுவரை அது தான் அதிகபட்ச சாதனையாக உள்ளது. மேலும், உலகில் வேறு எந்த நாட்டிலும் ஒரே நாளில் இத்தனை பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரும் கூட வேக்சின் பணிகள் சீராகவே நடைபெற்று வந்தது. கடந்த அக். 21ஆம் தேதி இந்தியாவில் 100 கோடி கொரோனா வேக்சின் போடப்பட்டது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே கொரோனா உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வேக்சின் பற்றாக்குறை நீங்கியது. பல வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பெரும்பாலும் கோவிஷீல்டு வேக்சினே பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இதுவரை 143 கோடி கொரோனா வேக்சின் டோஸ் போடப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 61% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினும் 40% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ்
இந்தச் சூழ்நிலையில் தான் உலகின் பல நாடுகளிலும் கொரோனா வேக்சின் தடுப்பாற்றல் குறித்த ஆய்வு முடிவுகள் வெளி வரத் தொடங்கியது. 3ஆவதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். ஓமிக்ரான் உருமாறிய கொரோனா பரவலும் அதிகரிக்கவே பல நாடுகளிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிச.25இல் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுக்கு, 60 வயதைக் கடந்தவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி 10 முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3ஆம் டோஸ் போடப்படும் என அறிவித்தார். மேலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 12 வயதைத் தாண்டி சிறார்களுக்கும் வேக்சின் பணிகள் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கிடையே நேற்றைய தினம் (டிச.28) கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் மால்னுபிரவிர் மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைய முடியவில்லை என்றாலும் கூட அதிகப்படியான மக்களுக்கு வேக்சினை கொண்டு சேர்த்துள்ளது மத்திய, மாநில அரசுகள்.
இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேக்சின்கள்
கோவிஷீல்டு
கோவாக்சின்
ஸ்புட்னிக் வி
மாடர்னா
ஜான்சன்
ZyCoV-D
கோர்பிவேக்ஸ்
கோவோவேக்ஸ்