ரன்வேயை விட்டு விலகாத பனி.. குழப்பத்தில் விமானிகள்! டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிப்பு
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதாகல் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் நீண்ட நேரம் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கின்றனர்.
நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 சர்வதேச புறப்பாடுகள், 23 சர்வதேச வருகைகள், 33 உள்நாட்டு புறப்பாடுகள் மற்றும் 43 உள்நாட்டு வருகைகள் என மொத்தம் 120 விமானங்கள் மிகவும் தாமதாக இயக்கப்பட்டன. அதேபோல 53 விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
ரயில் சேவையை பொறுத்த வரையில் பூரி-நிஜாமுதீன் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹைதராபாத்-புது டெல்லி ஆகிய இரண்டு ரயில்கள் சுமார் 6-6.30 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. அசம்கர்-டெல்லி ஜங்ஷன் கைஃபியத் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்பேத்கர்நகர்-கத்ரா ஆகிய ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இப்படி மொத்தமாக 20 ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
தில்லி தவிர கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications