பட்ஜெட் உரை தொடங்கும்போது தெலுங்கு கவிதை.. இடையே ‘திருக்குறள்’ சொன்ன நிர்மலா சீதாராமன்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பெரும்பாலும் தனது பட்ஜெட் உரைகளின் தொடக்கத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டுவார் நிர்மலா சீதாராமன். ஆனால், இந்த முறை தெலுங்கு கவிதை ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். இடையே திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு முன் திருக்குறள், புறநானூறு, ஆத்திக்சூடி போன்ற தமிழின் தனிச் சிறப்புமிக்க சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி உள்ளார். ஆனால் கடந்த ஆண்டு, திருக்குறளை தவிர்த்திருந்தார் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று பட்ஜெட் உரைக்கு இடையே திருக்குறள் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார்.

தெலுங்கு கவிதை
2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், தெலுங்கு கவிதை ஒன்றை மேற்கோள் காட்டினார்.
தெலுங்கு எழுத்தாளர் குரஜாடா அப்பாராவின் 'தேசமாண்டே.." கவிதையுடன் பட்ஜெட் உரையை தொடங்கி உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். "நாடு என்பது மண் அல்ல, நாடு என்பது மனிதர்கள்" என்ற விளக்கத்துடன் குரஜாடா அப்பாராவின் கவிதையை சுட்டிக்காட்டி உரையாற்றி உள்ளார் மத்திய நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் திருக்குறளை குறிப்பிடாமல் இந்த முறை, நிர்மலா சீதாராமன், தெலுங்கு கவிதையை மேற்கோள் காட்டியல் தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது. கடந்த பல ஆண்டுகளாக பட்ஜெட் உரைகளில் இடம்பெற்ற திருக்குறள் இந்த முறை இடம்பெறாதது தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
பூர்வீகம் தமிழ்நாடு
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டெல்லியில் படித்து வளர்ந்தவர். இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பாரகலா பிரபாகருடன் திருமணமானது. இவர்களுக்கு பாரகலா வங்கமாயி என ஒரு மகள் உள்ளார். கடந்த 2014 ஆட்சியில் பாஜகவுக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன்.
எம்.பி-யாகி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி அவரை மத்திய நிதி அமைச்சராக நியமித்தார். கடந்த 2019 ஜூலை மாதம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார் நிர்மலா சீதாராமன்.
தமிழ் பாடல்கள் - திருக்குறள்
அப்போது தான் ஒரு தமிழர் என்பதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் வகையிலும் பட்ஜெட் உரையில் தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசி இருந்தார் நிர்மலா சீதாராமன்.
நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த பிசிராந்தையார், பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு வரிவிதிப்பின்போது யானையை குறிப்பிட்டு பாடிய பாடலை உவமையாக்கினார். 'காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, 'மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்... என்ற பாடலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பொருளாக 'காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அது பல நாளுக்கு வரும். நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்.' என விளக்கத்தையும் அளித்தார்.
யானைக்கு உணவாக கவளம் அளிப்பது போல் தம் அரசு வரியை விதிக்கும் எனவும், மாறாக அதை நேரடியாக இறக்கி வயலை சேதத்திற்கு உள்ளாக்காது எனத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமன், தமிழ் இலக்கியத்தைச் சுட்டிக்காட்டி பட்ஜெட் உரையைத் துவக்கியதை தமிழக எம்.பிக்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில்
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் திருக்குறள், அவ்வையார் பாடல் உள்ளிட்ட பல தமிழ் உவமைகளை நிர்மலா சீதாராமன் தவறாமல் குறிப்பிட்டு வந்தார். ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, தமிழ் உட்பட எந்த மொழியிலும் மேற்கோள் காட்டவில்லை. திருக்குறளை மேற்கோள் காட்டாதது தமிழர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் திருக்குறளை தவிர்த்து அதற்குப் பதிலாக, தெலுங்கு கவிதையை மேற்கோள் காட்டினார்நிர்மலா சீதாராமன். அதேசமயம், பட்ஜெட் உரைக்கு நடுவில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
எனும் திருக்குறளை மேற்கோள் காட்டி உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் திருக்குறளைச் சுட்டிக்காட்டியதற்கு எம்.பிக்கள் மேசையைத் தட்டிப் வரவேற்பு தெரிவித்தனர்.
செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள இந்தக் குறளின் பொருள், "உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் நலமுடன் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது." என்பதாகும்.












Click it and Unblock the Notifications