தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம்
சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ம்ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு இருந்தது.

தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்தது. அதேபோல், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பதவிக்கு பல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் பெயர் அடிபட்டன. தமிழகத்தில் தொடர்ந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடைபெற்ற போதும் இந்த தகவல் ஆணையர் பொறுப்பு காலியாகவே வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆணையர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன. முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.












Click it and Unblock the Notifications