ஏப்ரல் 11 வரை ஜெயில்..சிறையில் என்ன செய்கிறார் மாஜி என்எஸ்இ சிஇஓ..சித்ரா ராமகிருஷ்ணா காவல் நீட்டிப்பு
டெல்லி : தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்சி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்இ நிர்வாக இயக்குநர்-தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.
தனது பதவி காலத்தின் பல்வேறு முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது.

என்எஸ்இ முறைகேடு
மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இமயமலையில் உள்ள மர்ம யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை அப்பதவிக்கு நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சிபிஐ அதிகாரிகள் கைது
தனியார் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. விசாரணையில் இமயமலை சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன் தான் என்பதும் தெரியவந்தது.

சித்ரா ராமகிருஷ்ணா விதிமீறல்
முன்னதாக செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமீறலில் ஈடுபட்டது உறுதியானதால் அவருக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

காவல் நீட்டிப்பு
இந்நிலையில் தற்போது சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்றுடன் அவருக்கு நீதிமன்ற காவல் முடிந்தது. இதையடுத்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை சித்ராவுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications